search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்வியும் செல்வமும் அருளும் தான்தோன்றீஸ்வரர் கோவில்
    X

    கல்வியும் செல்வமும் அருளும் தான்தோன்றீஸ்வரர் கோவில்

    சேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) அமைந்துள்ளது தான்தோன்றீஸ்வரர் கோவில். இன்று இந்த கோவில் பற்றிய வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
    ‘ஓம் நமசிவாய’ என்னும் திவ்ய மந்திரம் இம்மைக்கு மட்டுமல்ல... மறுமைக்கும் உகந்த திருமந்திரம். உலகமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவன் சிவபெருமானை வணங்கினால், தீவினை அகன்று நல்வினை சேர்ந்திடும். அவனது பேரருள் கடலினும் பெரிது என்பர் அடியவர்கள்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். எனவேதான் இவற்றை பஞ்சபூதங்கள் என்கிறோம். உயிர்கள் அனைத்தும் இந்த பஞ்சபூதங்களின் உருவாக்கமே. இதனை உணர்த்தும் வகையில் தான் இறைவன் பஞ்சபூத திருத்தலங்களில் கோவில் கொண்டு இருக்கிறார்.

    காஞ்சீபுரத்தில் (நிலம்) ஏகாம்பரேஸ்வரராகவும், திருவானைக்காவலில் (நீர்) ஜம்புகேஸ்வரராகவும், திருவண்ணாமலையில் (நெருப்பு) அருணாசலேஸ்வரராகவும், காளஹஸ்தியில் (காற்று) காளத்தீஸ்வரராகவும், சிதம்பரத்தில் (ஆகாயம்) நடராஜராகவும் வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார். இந்த ஐந்து திருத்தலங்களும் தென்னிந்தியாவிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல சேலம் மாவட்டத்திலும் பஞ்சபூத திருத்தலங்கள் உள்ளன. இவை வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூதத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர்பெற்றது.

    சேலம் மாவட்டம் பேளூரில் (நிலம்) தான்தோன்றீஸ்வரராகவும், ஏத்தாப்பூரில் (நீர்) சாம்பமூர்த்தீஸ்வரராகவும், ஆத்தூரில் (நெருப்பு) காய நிர்மலேஸ்வரராகவும், ஆறகளூரில் (காற்று) காமநாதீஸ்வரராகவும், விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கூகையூரில் (ஆகாயம்) சொர்ணபுரீஸ்வரராகவும் சிவபெருமான் அருளாட்சி புரிகிறார்.

    இந்த திருத்தலங்களில் தரிசனம் செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். வாருங்கள் இந்த வாரம் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள பஞ்சபூத தலங்களில் முதல் திருத்தலம் பற்றி பார்ப்போம்.

    சேலம் மாவட்டம் பேளூரில் உள்ளது தான்தோன்றீஸ் வரர் கோவில். இந்த ஆலயம் பிருத்வி(நிலம்) தலமாக விளங்குகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்ல நாயனாரை, இறைவன் சோதித்து தம் திருவடியில் சேர்த்துக்கொண்ட புண்ணியத்தலம் இது.

    பழமை வாய்ந்த இந்த ஆலயம், காசிக்கு நிகரானது என்று போற்றப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வேள்வி புரிந்ததால் ‘திருவேள்வியூர்’ என்றும், ‘வெள்ளூர்’ என்றும் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘பேளூர்’ என்று மருவியதாக கூறுகிறார்கள். அதேபோல இங்கு ஓடும் வசிஷ்ட நதிக்கும் ‘வெள்ளாறு’, ‘சுவேதநதி’ என்ற பெயர்கள் உள்ளன.



    தல வரலாறு

    பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், ஒரு முறை தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்தான். அப்போது கிருஷ்ணன், அர்ச்சுனனிடம் ‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக’ என்றார். உடனே சிவனை நினைத்து, பிறை வடிவமான பாணத்தை மலை அடிவாரத்தில் செலுத்தினான் அர்ச்சுனன். இதனால் சிவன் மகிழ்ந்து, அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை வழங்கினார். மேலும் தனது திருமுடியில் இருந்து கங்கையின் ஒரு பகுதியை இங்கே ஓடச் செய்தார். அந்த நதியே ‘வெள்ளாறு’ என்று பெயர் பெற்றது.

    ஒரு முறை இறைவனின் திருவுளப்படி, வசிஷ்ட முனிவர், இந்த நதிக்கரையில் தங்கி வேள்வி செய்தார். வசிஷ்டரின் வேள்வியில் மிஞ்சிய சாம்பலே குன்றாக மாறி, ‘கோட்டை மேடு’ என்ற பெயரில் விளங்குவதாக கூறப்படுகிறது. அந்த குன்று மண்ணே, இந்த ஆலயத்தின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    வசிஷ்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.

    கோவில் அமைப்பு :

    மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். மா, பலா, இலுப்பை மூன்றும் இணைந்த அதிசய மரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது. தீர்த்தம் வசிஷ்ட நதி.

    இந்த ஆலயம் 97 அடி உயர ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காகம் வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

    இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.



    கல்யாண விநாயகர் :

    இந்தக் கோவிலில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். இவரை கல்யாண விநாயகர்கள் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தியின் போது இந்த இரட்டை விநாயகரை வழிபட்டு அபிஷேகம், அர்ச்சனை செய்து அருகு அல்லது வெள்ளெருக்கு மாலை அணிவித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். இந்த விநாயகர் சன்னிதி முன்பாக திருமணங்கள் நடைபெறும். இந்த தலத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசீர்வதிப்பதால், இங்கு நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது கிடையாது.

    உளுந்தாக மாறிய மிளகு :

    முன்னொரு காலத்தில், இந்தப் பகுதியில் மாணிக்கம் செட்டியார் என்பவர் வசித்து வந்தார். மிளகு வியாபாரியான இவர் மிளகு செட்டியார் என்றே அழைக்கப்பட்டார். அவர் தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச்சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் களைப்பு காரணமாக, அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்கினார். அப்போது சமையல் செய்ய, சுண்டைக்காய்களை ஒரு கல்லில் நசுக்கும்போது ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது. உன் மிளகை அரைத்து பற்றுப்போடு’ என்று ஒரு குரல் கேட்டது. இதனால் பயந்துபோன அவர் ‘என்னிடம் உளுந்துதான் இருக்கிறது’ என்று கூறியபடி, அங்கிருந்து அவசரமாக ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி.. மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.

    பதறிப்போன அந்த வியாபாரி அசரீரி ஒலித்த இடத்திற்குச் சென்று இறைவனை வேண்டினார். அப்போது, ‘நீ சுண்டைக்காய் நசுக்கிய இடத்து மண்ணை எடுத்து, உளுந்தின் மீது தூவு’ என்று குரல் ஒலித்தது. அதன்படியே செய்ய, உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதையடுத்து அந்த வியாபாரி தான் சுண்டைக்காய் நசுக்கிய கல்லை பார்த்தபோது, அது சுயம்புலிங்கம் என தெரியவந்தது. இதையடுத்து மிளகு செட்டியார் அந்தப் பகுதியில் இந்தக் கோவிலை கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    அமைவிடம் :

    சேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    Next Story
    ×