search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவக்கிரக தோஷம் போக்கும் சிங்கிரிக்குடி நரசிம்மர் கோவில்
    X

    நவக்கிரக தோஷம் போக்கும் சிங்கிரிக்குடி நரசிம்மர் கோவில்

    சிங்கிரிக்குடி நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக் கடன் என்று நம்பப்படுகிறது.
    சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

    வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது.

    இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

    இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.

    பெருமாள் தாங்கியுள்ள ஆயுதங்கள்: 1. பாதஹஸ்தம், 2. பிரயோக சக்கரம், 3. ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4. காணம், 5. அரக்கனின் தலை அறுத்தல், 6. கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7. இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8. இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9. இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10. சங்கம், 11. வில், 12. கதை, 13. கேடயம், 14. வெட்டப்பட்ட தலை, 15. இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16. இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும்.

    இது ஒரு பரிகாரத்தலம். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் செய்கிறார்கள்.

    நேர்த்திக்கடன் :

    சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக் கடன் என்று நம்பப்படுகிறது.

    16 கரங்களுடன் கம்பீரமான தோற்றம் :


    அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மூல விக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.

    முதன்மைக் கடவுளான திருவந்திபுரம் தேவநாதன்தான் இங்கு நரசிம்மராக சேவை சாதிக்கிறார் என்பர். ஆனால் திருமங்கையாழ்வார் நரசிம்ம சாமிதான் திருவந்திபுரத்தில் தேவநாத சாமியாக உள்ளார் என்று பாடியிருக்கிறார்.

    ஸ்ரீஅஹோபில மடத்தில் 4-வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது.

    ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.

    இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங் களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.

    பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண் யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.

    மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது.

    கோவில் பற்றி தகவல்கள் அறிய இந்த எண்ணில் +91- 413-261 8759 தொடர்பு கொள்ளவும்.
    Next Story
    ×