search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் சிவபுரீஸ்வரர் திருக்கோவில்
    X

    திருமண தடை நீக்கும் சிவபுரீஸ்வரர் திருக்கோவில்

    திருமணம் நடைபெற வேண்டியும், தடைபட்ட திருமணம் நடக்க வேண்டியும் கல்யாண சுந்தரேஸ்வரர் முன் ஹோமம் வளர்த்து ஆராதனைகள் செய்தால் பலன் நிச்சயம் என்று பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவாலயம் என்ற கிராமம். இங்கு சிவபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அய்யர்மலை இருப்பதால், இந்த ஊர் சிவாயமலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சிவபுரீஸ்வரர் என்ற திருநாமத்திலும், இறைவி பெரியநாயகி அம்மன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, முகப்பில் இடதுபுறத்தில் விநாயகரும், வலதுபுறத்தில் முருகன் வள்ளி- தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர். கோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம் உள்ளது. மண்டப தூண்களில் நாகர் சிற்பங்களும், ஆஞ்சநேயர் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முதல் கோபுரக் கதவு பிரமாண்டமாக காட்சி தருகிறது. இதை ராமாயணக் கதவு என்று கூறுகின்றனர். கோபுரத்தைத் தாண்டியதும் நீண்ட பிரகாரம் உள்ளது. அடுத்து மூன்று மாடங்களை கொண்ட கோபுரம் உள்ளது. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களுடன் இரண்டு பிரகாரங்களுடன் காட்சி தருகிறது ஆலயம்.

    அடுத்துள்ள முகப்பு மண்டபத்தின் இடதுபுறம் தூணில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமணம் நடைபெற வேண்டியும், தடைபட்ட திருமணம் நடக்க வேண்டியும் கல்யாண சுந்தரேஸ்வரர் முன் ஹோமம் வளர்த்து ஆராதனைகள் செய்தால் பலன் நிச்சயம் என்று பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

    மண்டபத்தின் வலதுபுறம் காலபைரவர் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    அடுத்துள்ள மகாமண்டபத்தில் அர்த்த மண்டபத்தின் எதிரே நந்தியும், பெரிய அளவில் விநாயகர் சிலையும் எதிரே மூஞ்சுறுவும் உள்ளன. கருவறையில் இறைவன் சிவபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவனுக்கு எதிரே வெளியே விநாயகர் பெரிய பீடத்தில் அமர்ந்திருப்பது, எந்த சிவாலயத்திலும் இல்லாத ஓர் அபூர்வ அமைப்பு இது என்கின்றனர் பக்தர்கள். உட்பிரகாரத்தின் தென் திசையில் நாயன்மார்களும், மேற்கில் கஜலட்சுமி சித்தி விநாயகர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வள்ளி- தெய்வானை சமேத முருகர், வடக்குப் பிரகாரத்தில் சோழபுரீசர், சண்டீஸ்வரர் சன்னிதிகளும், வடக்கில் அம்மன் பெரியநாயகியின் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் தல விருட்சமான மகிழமரம் தழைத்தோங்கி காட்சி தருகிறது. தேவக்கோட்டத்தின் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

    நடராஜர் - சிவகாமி :

    மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் - சிவகாமி திருமேனிகள் உள்ளன. ஐம்பொன்னால் ஆன இந்தத் திருமேனிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு. திருவாதிரை அன்று நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று இருவரும் ஆலயம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்புரிவார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள 32 கிராம மக்கள் அன்று ஆலயம் வந்து நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க தவறுவதில்லை.

    தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    தல வரலாறு:

    சூரியவன்னி என்ற பெயர் கொண்ட மன்னன், மிக நேர்மையுடனும் மக்கள் மனம் கோணாது ஆட்சி செய்து வந்தான். அது சமயம் மயிடம் என்ற அசுரன், பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனது கடுந்தவத்தை கண்டு மனம் இரங்கிய பிரம்மன் அவன் முன்னே தோன்றினார்.

    ‘மயிடா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்றார் பிரம்மன்.

    அவனோ, ‘இறைவா! மானிடப் பிறவிகளாலோ அல்லது பிற உயிரினங்களாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. தவிர இவர்களைவிட அசுர பலம் கொண்டவனாக நான் இருத்தல் வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.

    பிரம்மனுக்கு, அவன் கேட்டபடியே வரத்தை அளித்து அங்கிருந்து மறைந்தார்.

    அசுர பலம் பெற்ற மயிடம், கர்வம் தலைக்கேற ஆணவத்தில் ஆட்டம் போடத் தொடங்கினான். தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினான். கண்களில் பட்ட மக்களை எல்லாம் துன்புறுத்தினான். அவனது துன்புறுத்தல் தாங்காது மக்கள் மன்னனிடம் ஓடினர். அசுரனது அராஜகம் பற்றி முறையிட்டனர். மன்னன் தன் படைபலத்தைக் கொண்டு அசுரனை அழிக்க முயன்றான், முடியவில்லை. தொடர்ந்து போரிட்டும் தோல்வியே எஞ்சியது. துவண்டு போன மன்னன், ‘என்ன செய்வது?’ என்று புரியாது தவித்தான்.

    இதையடுத்து இறைவன் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினான் மன்னன். தினமும் இறைவனை வேண்டி தங்கள் துன்பங்களைத் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டினான்.

    துர்க்கையான தேவி:

    மன்னனின் வேண்டுதலைக் கேட்ட கயிலைநாதன், தேவியை அழைத்தார். அசுரனை அழித்து வரும்படி பணித்தார்.

    தேவி புறப்பட்டாள். துர்க்கையின் வடிவம் கொண்டாள். சப்தகன்னியர் புடை சூழ அசுரனை நோக்கிச் சென்ற தேவி அவனை போருக்கு அழைத்தாள். அசுரன் யாருடன் போரிடுகிறோம் என்று புரியாது துர்க்கையுடன் போரிட்டான். கடுமையான போர் நடந்தது. தேவி, அசுரனின் இரு கொம்புகளைப் பிடித்து கீழே தள்ளினாள். தலை மேல் ஏறி நின்று வாளால் சிரசைத் துண்டித்தாள். அசுரனின் கதை முடிந்தது. ஆனால் தேவியை, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவி பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் துதித்தாள். பின்னர் இத்தலம் வந்து சிவபெருமானை வணங்க, தேவியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் இந்த இடத்தை சிவாயம் என்று கொண்டாடினர்.

    இந்த இடம் தற்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பகுதி அய்யர்மலை எனவும், மற்றொரு பகுதி சிவாயம் கிராமமாகவும் அழைக்கப்படுகிறது.

    பிரதோஷம் :

    இங்கு மாதப் பிரதோஷங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. சுமார் 300 பேர் இதில் கலந்து கொண்டாலும், சனி பிரதோஷ நாட்களில 1000 பேருக்கும் மேல் கலந்து கொள்வது சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    சிவாயம் செல்லும் பக்தர்கள் இங்கு அருள்பாலிக்கும் சிவபுரீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்மனை தரிசிப்பதுடன், அருகே உள்ள அய்யர்மலை மீது வீற்றிருக்கும் ரத்தினகிரீசுவரர் மற்றும் கரும்பர் குழலி அன்னையையும் தரிசித்து பயன் பெறலாமே.

    சிவாயம் செல்ல குளித்தலை - மணப்பாறை பேருந்தில் பயணித்து அய்யர்மலையில் இறங்கி 2 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். திருச்சியில் இருந்து நேரிடையாக சிவாயம் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன.

    கல்வெட்டுகள் :

    இந்த ஆலயத்தில் ஆறு கல்வெட்டுகள் உள்ளன. அவைகளை 1913-ல் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனர். ஓய்சாள நாட்டு வீர ராமநாதன், மூன்றாம் ராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளதால், இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது என அறிய முடிகிறது. கண்டைக்காய்பாறை கல்வெட்டில் வீரமல்லன், சீயமித்திரன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இந்த பாறையில் ஐந்து கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயத்தின் திருமதிற்சுவற்றில் உட்புறம் ஒருவர் நடந்து செல்லும் அளவிற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது வியக்க வைக்கக்கூடியது. மதிலின் உச்சியிலிருந்து சுமார் நான்கு அடி கீழே, உட்புறம் உள்ள இந்தப்பாதையில் பயணித்தால் ஆலயம் மற்றும் வெளிப்புற கிராமத்தை முழுமையாக நாம் தரிசிக்கலாம்.
    Next Story
    ×