search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டிய வரம் தரும் வேணுகோபாலசுவாமி திருக்கோவில்
    X

    வேண்டிய வரம் தரும் வேணுகோபாலசுவாமி திருக்கோவில்

    பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி திருக்கோவில்.
    நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் கிடந்த நிலை என மூன்று கோலங்களில் பெருமாள் காட்சி தரும் ஆலயம், இறைவனை அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் வீற்றிருக்கும் தலம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில், உயர்ந்த ஊஞ்சல் மண்டபம் கொண்ட ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது வெங்கட்டாம்பேட்டை வேணுகோபாலசுவாமி திருக்கோவில்.

    புராண வரலாறு:

    கலியுகத்தின் தொடக்கத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும் அதர்மமும் தலைதூக்கியது. எனவே அந்த மகரிஷி அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயனமானார்.

    தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதியில் அவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது நீர் வற்றியிருந்த கருட நதியின் வெப்பம் தாளாமல் அவர் தவித்தார். அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்தது. அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதையானது, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    தவத்தால் மகிழ்ந்த திருமால், லட்சுமிதேவியோடு மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் தரிசனத்தைக் கண்டு அகமகிழ்ந்த முனிவர், ‘இறைவா! தாங்கள் உலகைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் எனக்கு காட்டி அருள வேண்டும்’ என்று வேண்டினார்.



    பெருமாளும் அவ்வாறே காட்சி கொடுத்து அருளினார். அதன்பின்னர் மகரிஷி, ‘இறைவா! தாங்கள் இந்த திருத்தலத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அளித்து அருள் செய்ய வேண்டும்’ என்று பணிந்தார்.

    அதன்படியே வரமளித்த பெருமாள், இங்குள்ள ஆலயத்தில் நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா சமேத வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷன் பாம்பணையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சி தருகிறார்.

    ஆலய அமைப்பு :

    ஊரின் கிழக்கே பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வாயிலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி. 1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    வேணுகோபாலர் சன்னிதி :

    மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி இருக்கிறது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கின்றார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும்.

    இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப இறைவன் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி அமைந்திருக்கிறது. சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேங்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா இருவரும் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார்கள்.



    மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி காணப்படுகிறது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தரு கிறார். வடக்கே ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது.

    இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் துயில் கொள்ளும் கிடந்த கோலக் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. திருமாலின் மார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்ச நேயரும் வீற்றிருக்கின்றனர். தர்ப்பைப் புல்லில் துயில் கொள்ளும் ராமரின் அபூர்வக் கோலம் திருப்புல்லாணி என்ற திருத்தலத்திலும், தஞ்சை மாவட்டம் திருவெள்ளியங்குடி கோலவல்லி ராமர் திருக்கோவிலிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சூரியனும் சந்திரனும் :

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்களும், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும்.

    கோவிலின் எதிரே சுமார் 50 அடி உயரத்தில், பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபம் தற்போது புனரமைப்புக்காகப் பிரிக்கப்பட்டு, தமிழக அரசின் நிதியுதவியால் மறுநிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

    திருக்குளம் :

    ஊஞ்சல் மண்டபத்தின் எதிரே அழகிய திருக்குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் மையப் பகுதியில் ஏழு கிணறுகள் உள்ளதாக கூறுப்படுகிறது. இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும், அதையொட்டி தென் பகுதியில் சமாதி ஒன்றும் காணப் படுகிறது. இது இந்தத் திருக்கோவிலைக் கட்டி முடித்த சிற்பியின் சமாதி எனக் கூறப்படுகிறது. ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்துள்ளதாகக் தல வரலாறு கூறுகிறது.

    தொன்மைச் சிறப்பு :

    தமிழக கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி என்பவரின் வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது. செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478) இந்தத் திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு சிறப்புடன் விளங்கியிருக்கிறது.

    தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் வெங்கட்டம்மாள்பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் இது மருவி, வெங்கட்டாம்பேட்டை என்ற பெயருடன் விளங்குகிறது. கி.பி.1464-ல் இருந்து சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் மிகச் சிறப்புடன் இருந்தது என்பதை செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடி கிறது.

    புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில், மொழிப் பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவருக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

    விழாக்கள் :

    இந்த ஆலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடைத் திறந்திருக்கும். இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆயத்தில் ஏழு நிலை ராஜகோபுரம், ஊஞ்சல் மண்டபம், மதில்சுவர்கள் போன்றவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணி நிறைவடைந்ததும் கும்பாபிஷேக விழாக்கள் வெகு விரைவில் நடைபெற உள்ளது.

    அமைவிடம் :

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில், குறிஞ்சிப் பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தூரத்திலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. 
    Next Story
    ×