search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புத பலன் அளிக்கும் ஆதிநாதன் ஆலயம்
    X

    அற்புத பலன் அளிக்கும் ஆதிநாதன் ஆலயம்

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.
    திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) என்ற இடத்தில் திருவாழ்மார்பன் கோவில் இருக்கிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் அருகில் உடைய நங்கை என்ற விஷ்ணு பக்தை வாழ்ந்து வந்தார். இதே போல் திருநெல்வேலி அருகில் உள்ள ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்) என்ற இடத்திலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் வசித்து வந்தவர் காரி. இவரும் சிறந்த விஷ்ணு பக்தர் ஆவார். உடைய நங்கைக்கும், காரிக்கும் திருமணம் நடைபெற்றது.

    நம்மாழ்வார் திருத்தலம் :

    திருப்பதிசாரத்தில் மகாவிஷ்ணுவின் அருளால், அந்த தம்பதியினருக்கு நம்மாழ்வார் அவதரித்தார். பிறந்தவுடன் அழாமல், தாய் அமுது உண்ணாமல் மவுனத்தோடு இருந்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் திருக்குருகூரில் உள்ள ஆதிநாதன் சன்னிதியில் விட்டனர். அந்த குழந்தை தவழ்ந்து போய் அங்கிருந்த புளியமரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது.

    பின்னர் யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து விட்டது. பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் தல மரமான புளியமரத்திலேயே நம்மாழ்வார் தவ நிலையில் இருந்தார். பிறகு வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக மொழிய, அதனை திருக்கோளூரில் (ஆழ்வார் நவ திருப்பதியில்) பிறந்த மதுரகவியாழ்வார் ஏட்டில் எழுதினார்.

    பாசுரம் பாடினார் :

    பல திவ்ய தேசங்களிலும் எழுந்தருளி உள்ள எம்பெருமான்கள் திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்து கொண்டு, ‘எம்மைப் பாடுக!, எம்மைப் பாடுக!’ என நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக தல வரலாறு கூறுகிறது. நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய தேச தலங்களுக்கு பாசுரம் பாடி அருளினார்.

    நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி நாலாயிரம் பாக் களையும் அருளியதாகவும், அதனை நாதமுனிகள் ஏட்டில் எழுதி தொகுத்தார் என்றும் கூற்று நிலவுகிறது. கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும் போது, பெருமாள் ‘சடகோபனை (நம்மாழ்வார்) பாடினாயோ?’ என்று கேட்க, கம்பர் உடனே நம்மாழ்வாரைப் போற்றி பாடினார்.

    ஆழ்வார் திருநகரிக்கு வந்த ராமானுஜர், ‘இதுவோ திருநகரி, ஈதோ பொருநை இதுவோ பரமபதத்து எல்லை’ என்று கூறுகிறார். அதாவது ஆழ்வார் திருநகரியை பரமபதத்து எல்லை என்று கூறுகிறார் ராமானுஜர்.

    கோவில் அமைப்பு :

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவிலில் உள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும், மூலவர் ஆதிநாதன் சன்னிதியும் தனித்தனியே உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என இரு நாச்சியார்களுக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    மூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினர். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாத பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.

    பிரம்மாவுக்கு உபதேசம் :

    இந்த கோவிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிர பரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல ‘மோகன வீணை’ எனும் ‘கல் நாதஸ்வரம்’ உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு.

    இத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ஸ்ரீரங்கம் அரங்கனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகனுக்கும் சன்னிதிகள் உள்ளன. காசிப முனிவரின் சாபத்தால், இந்திரன் தனது செல்வங்களை இழந்தான். பின்னர் இத்தல ஆதிநாத பெருமாளை வழிபட்டு, அவற்றை மீண்டும் பெற்றான்.

    பிரம்மதேவருக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாதன் உபதேசம் செய்ததால் இத்தலம் குருகூர் என்றானது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன், ராமானுஜர் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன.

    வைகுண்ட பதவி :

    ‘குருகு’ என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.

    இத்தலத்தில் யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

    அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்தது.

    நாகதோஷம் நீங்க...

    இங்குள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு ‘சேஷ ஷேத்திரம்’ என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.

    திருநெல்வேலி- திருச்செந்தூர் வழிப்பாதையில் தென்கிழக்காக 30 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக் குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது.
    Next Story
    ×