search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திலதைப்பதி கோவில் - மயிலாடுதுறை
    X

    திலதைப்பதி கோவில் - மயிலாடுதுறை

    இறைவன் மந்தாரவணேஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் சுவர்ணவல்லி என்ற பெயருடனும் இந்த கோவிலில் வீற்றிருக்கிறார்.
    முருகனுக்கு அழகன் என்ற பெயர் உண்டு. அந்த அழகனுக்கு அண்ணன் அழகனாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் விநாயகருக்கே, முருகப்பெருமானுக்கு எதிரிடையான முகம். முருகனைக் காட்டிலும், விநாயகர் உடலால் பருமனானவர். அவருக்கு தலையாக இருப்பது யானையின் தலை. பெரிய வயிறு, பெரிய உடம்பு என்று மலைபோல் காட்சியளிப்பவர் விநாயகர். ஆனால் சிறு குழந்தை. ஆகையால்தான் அவரை ‘குழந்தை சாமி’ என்றும் அழைப்பார்கள்.

    அந்தக் குழந்தைசாமி கையிலே கொழுக்கட்டையை வைத்துக் கொண்டிருக்கிறார். யானை போன்ற உடல்வாகுடன் இருக்கும் அவருக்கு, வாகனமாக இருப்பதோ சின்னஞ்சிறு மூஞ்சுறு. தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும் விநாயகப்பெருமான், அந்தக் கொம்பில் ஒன்றை ஒடித்துத்தான் வியாசர் கூற, மகாபாரதக் கதையை எழுதினார் என்பது புராணம் கூறும் தகவல். உருவத்தில் இவ்வாறு இருக்கும் விநாயகர், தொடக்கத்தில் மனித முகத்துடன் தான் இருந்தார். அதை காட்சிப்படுத்தும் ஆலயம் பற்றியும், கதையையும் இங்கே பார்க்கலாம்.

    கஜமுகாசுரன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது கடும் தவத்தின் பயனாக அவன் முன்பாக தோன்றினார் பிரம்மதேவர். ‘கஜமுகா! உன்னுடைய தவத்தினால் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்’ என்றார்.

    அவனோ பேராசை காரணமாக தான் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும் வரம் தந்தருள வேண்டும் என்று பிரம்மாவை வேண்டினான்.

    பிரம்மாவோ, ‘உலகில் பிறந்த அனைவருக்கும் அழிவு என்பது உண்டு. ஆகையால் இயற்கையைத் தாண்டி எதையும் செய்ய இயலாது. வேறு ஏதாவது வரம் கேள்’ என்றார்.

    சற்று சிந்தித்த கஜமுகாசுரன், ‘ஆண்- பெண் கலப்பு இல்லாமல் பிறந்த ஒருவனால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்று வரம் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இல்லாமல் உயிர்கள் பிறப்பு இல்லை. எனவே தனக்கு அழிவு என்பதே கிடையாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆகையால்தான் அப்படியொரு வரத்தைக் கேட்டான்.

    அவன் கேட்ட வரத்தை அப்படியே தந்தார் பிரம்மதேவர். தான் பெற்ற வரத்தால் இறப்பு என்பதே தனக்கு இல்லை என்று நினைத்த கஜமுகாசுரன், உலக உயிர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனால் அனைவரும் எல்லையில்லாத துன்பங்களை அடைந்தனர். உலகமே அவனது ஆளுகையின் கீழ் வந்தது. இதனால் தேவர்களும், முனிவர்களும், தங்களைக் காத்தருளும்படி அன்னை பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அன்னையும், சிவபெருமானுடன் பேசி இதற்கு தீர்வு செய்வதாக உறுதியளித்தார்.

    சோழ நாட்டில் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையை ஒட்டி ஓடும் நதி அரிசிலாறு. அந்த நதிக்கரையை ஒட்டி மந்தார மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இதனால் அந்தப் பகுதி மந்தாரவனம் என்று அழைக்கப்பட்டது. அங்கு இறைவன் மந்தாரவணேஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் சுவர்ணவல்லி என்ற பெயருடனும் வீற்றிருந்தனர். இத்தலத்தில் தேவர்களும், கணங்களும் வந்து நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். அம்பாளும் கூட இத்தல இறைவனை வழிபாடு செய்வார்.

    ஒரு நாள் உலக வலம் சென்றிருந்தார். அப்போது அம்பாள் நீராடி இறைவனை வழிபட நினைத்தார். நீராடச் செல்லும் முன்பாக தான் வரும் வரை காவலாக இருக்க ஒருவரை நியமிக்க எண்ணினார். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சளில், அழகான இளம் பிராயத்து பிள்ளை ஒன்றை உருவாக்கினார்.

    பின்னர் அந்த சிறு பிள்ளையிடம், ‘மங்கள மகனே! யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்காதே’ எனக் கட்டளையிட்டு நீராடச் சென்றார். அழகனின் அண்ணனோ சரியென்று தலையாட்டி விட்டு, வாசல்படியில் அமர்ந்து காவல் காக்கத் தொடங்கினான்.

    அந்த நேரம் பார்த்து உலக உலாவை முடித்துக் கொண்டு வந்தார் சிவபெருமான். வாசலில் அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்ததும் அவர் அனைத்தையும் உணர்ந்து கொண்டார். கஜமுகாசுரனை அழிக்க சிறந்த பிறவி என முடிவு செய்தார். வாசலில் அமர்ந்திருந்த பாலகனை கவனிக்காதது போல, உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அந்த பாலகனோ, ‘யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை’ என்று கூறி சிவபெருமானைத் தடுத்தான்.

    இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஈசனுக்கு கோபம் உண்டானது. சினம் மேலோங்க பாலகனின் சிரத்தை துண்டித்தார். பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்தார் பார்வதிதேவி. அங்கு தனது பிள்ளை தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு, அந்தக் குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார்.

    சிவனும் தன்னுடைய தவறை உணர்ந்தவர் போல் அந்த பாலகனுக்கு உயிர் தர முன் வந்தார். சிவகணங்களை அழைத்து, ‘உலகில் இயற்கைக்கு மாறாக வடபுறம் தலை வைத்திருக்கும் உயிர்களில், உயர்ந்தது எதுவோ அதன் தலையைக் கொண்டுவந்து வையுங்கள்’ என்றார். வடக்கில் தலை சாய்த்து படுத்திருந்த யானையின் தலை கொண்டுவந்து பொருத்தப்பட்டு, பாலகனுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. வேழ முகத்தோடு வேறு உருவில் உயிர் பெற்றான் பார்வதி பாலன். தன்னை படைத்த தாயையும், தலை மாற்றி தனக்கு உயிர் கொடுத்த தந்தையையும் வணங்கினான்.

    இதையடுத்து அந்த பாலகனுக்கு கஜ முகாசுரனின் வரலாறும், அவனது தவமும், பெற்ற வரமும் விளக்கிக் கூறப்பட்டது. ‘விக்னங்களை அழிக்க உருவெடுத்தவன் நீ!. கஜமுகாசுரன் என்னும் அசுரனுக்குச் சமமாக நின்று போர் புரிய வேண்டுமாதலால், கஜத்தின் தலை உனக்கும் பொருத்தப்பட்டுள்ளது. உலகமும், உலகில் உள்ள மக்களும், தேவர்களும் உன் வரவுக்காக காத்திருக்கின்றனர்’ என்றார் சிவபெருமான். அதைக் கேட்டு அனைவரிடமும் ஆசி பெற்றுச் சென்று கஜமுகாசுரனுடன் கடும்போர் புரிந்து அவனை அழித்து வெற்றி பெற்றுத் திரும்பினார் விநாயகப்பெருமான்.

    மகிழ்ந்த சிவனும், உமையும் விநாயகருக்கு அங்கீகாரம் அளிக்க விரும்பினர். அதற்காக அவரது விருப்பத்தையும் கேட்டனர். வேழ முகத்தான் தன்னுடைய விருப்பத்தைக் கூறினார்.

    ‘எப்போதும் பெற்றோரான நீங்கள் வசிக்கும் இடத்தில் உங்களோடு நானும் இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடங்களில் மூத்த மகனாக நான் முன் இருக்க வேண்டும். நான் உருவான இடத்தில், இதற்கு முன்பான எனது மனித உருவத்துடன் நான் இருந்து என்னை வணங்க வருபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்டார்.

    அதன்படி விநாயகப்பெருமானுக்கு சிவாலயங்களில் தனி சன்னிதி அமைக்கப்பட்டது. பஞ்சமூர்த்தி புறப்பாடுகளில் சிவன்- பார்வதி புறப்பாடுக்கு முன்பாக, விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது. சிவன் தனது கணங்களுக்கு எல்லாம் அவரைத் தலைவனாக்கினார். அதனால் விநாயகர் ‘கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மனித முகத்தோடு ‘ஆதி விநாயகர்’ என்னும் பெயருடன், திருக்கோவிலின் முன்புறம் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார். ஆதி விநாயகர் குடியிருக்கும் இந்த ஊர் ‘செதலப்பதி’ எனப்படுகிறது. இந்தத் தலத்தை திருஞானசம்பந்தர் ‘மதி முத்தம்’ என்று குறிப்பிடுகிறார். முன்னோர்களுக்கு எள் வைத்து தர்ப்பணம் செய்யும் தலம் என்பதால் பலரும் இதை ‘தலதர்ப்பணபுரி’ என்றே அழைத்தனர். பின்னர் திலதைப்பதி என்றானது. இங்கு ஆதி விநாயகர், மனித முகத்தோடு, வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வைத்து, இடது கையை இடதுகாலின் மீது வைத்தும், வலது கையை சற்றே சாயத்து அபய முத்திரை காட்டிய படியும் காட்சி தருகிறார்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதி அன்றும், விநாயகர் சதுர்த்தி அன்றும், ஆதி விநாயகரை தரிசனம் செய்வது உகந்த நாட்களாக கூறப்படுகிறது.

    திலதைப்பதி என்று வழங்கப்படும் இந்தத் திருத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்ல பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்களில் எளிதாக செல்லலாம்.
    Next Story
    ×