search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    • பவுர்ணமி அன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    மேலும் தீபத் திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் தீவு அமைந்துள்ளது.

    கரைபுரண்டோடும் காவிரி, அதன் நடுவே பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத்திகழ்கிறார் சிவபிரான்.

    ஈரோட்டில் அமைந்துள்ள இந்த தீவின் பெயர் நட்டாற்றீஸ்வரர் தீவு. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் நீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி தீவின் நடுவே சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு முதலில் பரிசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கரையில் இருந்து கோயிலுக்கு செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும்.

    கோயிலின் வரலாறு

    இந்த கோவில் குறித்து பழங்கால புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அகத்திய முனிவர் தனது பாவங்களைப் போக்க ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாராம். மணலால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் காவேரி ஆற்றின் மையத்தில் ஒரு குன்றின் மீது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகத்தியர் தனது ருத்ராட்ச மாலையை மலையை சுற்றி வைத்துவிட்டு தனது தவத்தை தொடங்கினார்.

    சித்திரை முதல் நாள் அவர் எந்த தொந்தரவும் இல்லாமல் தவம் செய்துள்ளார். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று சில இடையூறுகளால் கண்விழித்த அவர் தனது தவத்தை முடித்துக் கொண்டாராம். பின்னர் அவர் தனது ருத்ராட்ச மாலையை லிங்கத்தில் இருந்து அகற்ற முயன்றார். பின்னர் சிவபெருமானின் தெய்வீக குரலை கேட்டாரம். அப்போது சிவபெருமான் தனது லிங்கத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அது நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என்று கூறினாராம்.

    அகத்தியரையும், அங்கு வந்த அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்க தோன்றியதாகவும் கூறினாராம். எனவே, இந்த புராணத்தின் படி சிவபெருமான் ஈரோடு நகரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அகத்திய முனிவர் தனது எஞ்சிய பணியை முடிக்க தெற்கில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலைக் கட்டி, கோவிலில் சிவ லிங்கத்தை நிறுவினர். இங்குள்ள லிங்கத்திற்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். இந்த கோவிலுக்குள் அமைந்துள்ள அத்தி மரத்தை பக்தர்கள் காணலாம். இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

    எப்படி செல்வது?

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்தில் ஏறி சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆற்றங்கரைகளில் இருந்தும் பரிசல் சேவைகள் இக்கோயிலுக்குச் செல்லலாம். எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த அழகான தீவு கோவிலுக்கு செல்வது நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.

    • திருப்புகழ் பாடலைப் பாடி முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.
    • முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் ஏராளமான கோவில்கள் உள்ளன.

    தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    முருகப்பெருமானே வழங்கும் பிரசாதம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது 'ஓம்' என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம். இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம். அவற்றை ஆலயத்திற்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு, பூரண கும்ப மரியாதை கொடுக்கும்போதும், வேள்வி செய்யப்படும்போதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து, விபூதியை பிரசாதமாக வழங்குவார்கள். இந்த பன்னீர் இலையில், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு நரம்புகள் பாய்வதைக் காணலாம். முருகப்பெருமான் தன் திருக்கரங்களாலேயே விபூதியை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில்தான் பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மயில் மீது அமர்ந்தமுருகன்

    திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். 'வக்ரன்' என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு 'வக்கரை' என்று பெயா் வந்தது. இங்கே வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறு முகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி - தெய்வானை இருக்கிறார்கள். அருண கிரிநாதரின் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அந்த திருப்புகழ் பாடலைப் பாடி இத்தல முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.

    சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, சிறுவாபுரி என்ற ஊர். இங்கு அருள்புரியும் முருகப்பெருமானும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ள இறைவன் 'வள்ளி மணவாளப் பெருமான்' என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் முகப்பெருமான் 'கல்யாண முருக'ராக அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், விரைவிலேயே அந்தத் தடை விலகி திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் கனவும் நனவாகும் என்கிறார்கள்.

    அதிகார முருகன்

    சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம் என்ற ஊர். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான், அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறும்படி, தன்னுடைய இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையில் இந்த முருகன் காட்சியளிக்கிறார். இதனால் இவரை 'அதிகார முருகன்' என்றும் அழைப்பார்கள். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத காரணத்தால், பிரம்மனை சிறையில் அடைத்ததோடு, அவர் செய்து வந்த படைப்புத் தொழிலையும், முருகப்பெருமானே செய்து வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும் இவரை `அதிகார முருகன்' என்று சொல்கிறார்கள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அதிகாரம் நிறைந்த பதவிகளை இவர் வழங்குவதாக ஐதீகம்.

    • இந்த தலத்தில் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது.
    • இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

    மனித வாழ்வில் அன்றாடம் நாம் அனுபவிக்கும் இ்ன்ப, துன்பங்களுக்கு முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களே முக்கிய காரணமாக அமைகிறது.

    இப்பிறவியில் நாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யாது இருந்தாலும் நம் வாழ்வை சூழ்ந்துள்ள துன்பம் நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது. இதற்கு நாம் பிதுர்கடன், பரிகார பூஜை, விரதமுறை, குலதெய்வ வழிபாடு போன்றவற்றை மறந்ததே காரணம் ஆகும். குறிப்பாக பைரவர் வழிபாடு மனிதர்களை தீவினைகளில் இருந்து காத்து அவர்களுக்கு நல்வாழ்வை அளிக்கும்.

    காலபைரவர்

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. பைரவருக்கென தனி கோவில் சேத்திரபாலபுரத்தில் மட்டுமே உள்ளது. மேலும் இங்கு உள்ள பைரவர் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

    பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்து பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தும் தோஷம் நீங்கவில்லை. இறுதியாக காவிரி தென்பகுதியில் உள்ள திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட்டவுடன் கால பைரவருக்கு பிரம்மஹத்தி சாபம் நீங்கியது.

    அப்போது விநாயக பெருமான், பைரவருடைய சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசுமாறு கூறினார். இதனால் பைரவர் தனது சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீச அந்த சூலாயுதம் சேத்திரபாலபுரம் இந்திர தீர்த்தத்தில் விழுந்தது.

    சுவேத விநாயகர்

    சூலம் தூக்கி வீசப்பட்ட பிறகு இந்த ஊரில் தான் சூலாயுதம் கிடக்கும் என்று விநாயகர் கால பைரவரை அழைத்து வருகிறார். பிறகு சேத்திர பாலபுரத்தில் உள்ள கணபதி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தத்தில் நீராடிய பிறகு சூலம் கிடைக்கிறது. அதன் பின் சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு அதே சுவேத விநாயகரை தரிசனம் செய்ய பைரவர் சென்றபோது பைரவரிடம், விநாயகர் தற்போது கோவில் உள்ள இடத்தில் சேத்திர பாலகராக தங்கி சூலக்கட்டு வியாதிகளை நிவர்த்தி செய்து பக்தர்களை காக்க கட்டளையிட்டார்.

    தாமரையில் பைரவா்

    சேத்திரபாலகராக பைரவர் இங்கு தங்கியதால் இந்த ஊர் சேத்திரபாலபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. தாமரை மலரில் பைரவர் வீற்றிருக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

    இந்த கோவிலில் நடைபெறும் வழிபாடு வேறு எங்கும் இல்லாத வகையில் தனி சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் தேங்காய் மூடியில் நெய் தீபம் இட்டு வழிபட்டால் குடும்ப நலன், காரிய வெற்றி கிடைக்கும். குறிப்பாக திருமணத்தடை அகலும் என்பது ஐதீகம்.

    முந்திரி பருப்பு மாலை

    சனி திசை, சனி மகா திசை, ஏழரைச்சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

    புத்திர தோஷம்

    அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 54 முழு முந்திரிக்கொட்டையை எடுத்து அதனை மாலையாக தயார் செய்து பைரவருக்கு சாற்றி தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...

    மேலும் இங்கு தேய்பிறை அஷ்டமி திதியில் எண்ணெய்யை மந்திரித்து தடவ மூட்டு வலி, கால் வலி, சூலக்கட்டு வியாதிகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பைரவா் வீசிய சூலாயுதம் இங்கு கிடைத்ததால் பைரவர் ஆனந்தம் அடைந்தார். இதனால் இந்த தலத்து பைரவர் ஆனந்த கால பைரவர் என அழைக்கப்படுகிறார். இங்கு அர்ஜுனனுக்கு பாசுபதம்(கோடாலி உருவ ஆயுதம்) கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

    அஷ்டமியில் கால பைரவரை வழிபட்டால் தீவினைகள் நீங்கும். . தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியில் கால பைரவரை 11 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டால் தனிச்சிறப்பு. இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் என்றும் முன்பு கிராம கோவிலாக இருந்த இந்த ஸ்தலம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    அபிஷேகம்

    சேத்திரபாலபுரம் கால பைரவர் கோவிலில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமியை தவிர்த்து தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. இந்த கோவிலில் வருடத்திற்கு சித்ரா பவுர்ணமி கார்த்திகை கடை ஞாயிறு உள்ளிட்ட நேரங்களில் பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு வருடத்திற்கு 2 முறை விழா கொண்டாடப்படுகிறது.

    இங்கு பைரவருக்கு சந்தனாதி தைலம், அரிசி மாவு, மஞ்சள்தூள், திரவிய பொடி, நெல்லி பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், இளநீர், தயிர், எலுமிச்சை, நார்த்தங்காய், கரும்புச்சாறு, புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், விபூதி, பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் பரிகார தீபங்கள் ஏற்ற பெரிய அளவில் தனி இடம் உள்ளது.இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வர வேண்டும். பின்னர் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கி.மீ். பயணித்து இந்த கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்புபவர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலுக்கு செல்லலாம்.

    • இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
    • இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

    சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாகும். இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.

    இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

    சேலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.

    இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை எடுத்து கூறுகின்றன.

    சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள்.

    வலது மேற் கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.

    அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

    ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. வாழ்வின் அடித்தளத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை உயர்த்துவதற்காக அன்னை உயரமான கருவறையில் அமர இருக்கிறார். அன்னையின் ஆலயம் வளர வளர சேலம் மாநகர் யாரும் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல் கட்டுமானப் பணி

    சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.

    சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

    ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் 2 வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

    கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும். மேலும் கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன.

    தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

    கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு, தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர்.

    கோவில் திருப்பணியில் இடம் பிடித்த கற்கள்

    கோவில்கள் இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோவில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோவில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக மட்டுமில்லாமல், வரலாறு, சமயம், பரிணாமம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவைகளில் நீங்கா இடம் பிடிக்கிறது.

    2017-ம் ஆண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் தவிர்த்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சேலம் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவிலில் புதியதாக விமானத்துடன் கூடிய கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் (கருங்கல் பணி) கட்டுதல், கருங்கற்களிலான மகா மண்டபம் கட்டுதல், சுற்றுப்பிரகாரம் மண்டபம் கட்டுதல், எடுத்துக்காட்டு மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள்யாவும் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துரு அறிக்கையின் அடிப்படையிலும் மண்டல, மாநில மற்றும் உயர்நீதிமன்ற குழுவின் ஒப்புதல்களின் அடிப்படையிலும் ஆணையரின் நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள கோவில்கள் வருமாறு:

    500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில், 7 கி.மீட்டர் தொலைவில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், 5 மீட்டர் தூரத்தில், குமரகுரு சுப்ரமணியசாமி கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும்.

    ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன் கோவில்

    சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் கோட்டை மாரியம்மன் கோவில் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு கட்டுமானமும் பார்த்து, பார்த்து மிகவும் கவனமாக நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மைய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் பிரமாண்டமாக ெஜாலிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) அன்னதான மண்டபத்தில் உள்ளது. பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் வசதி உள்ளது. குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகாமையில் ஈரடுக்கு பஸ் நிலையம் உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு வருகின்றனர்.

    இதோ ஒரு தகவல்

    தமிழக முதல்-அமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இத்திருக்கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அன்னதான கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 -01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100 முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750 என்ற வீதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத் தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள், செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சேலம் மாநகர் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

    கோட்டை மாரியம்மன் திருத்தல சிறப்பு

    சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.

    இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

    இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

    சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

    ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

    ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

    ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

    ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

    புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

    22 நாட்கள் கோலாகல விழா

    மாரி வளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஆடிப்பெருந்திரு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆடி மாதம் 22 நாட்கள் சிறப்புற கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18-ந் தேதியை அடிப்படையாக கொண்டே முக்கிய விழாக்கள் நிர்ணயிக்கப்ப டுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு முந்தைய செவ்வாய்க்கி ழமைகளில் முதல் செவ்வாய் பூச்சாட்டுதலும், 2-ம் செவ்வாய் கம்பம் நடுதலும் நடைபெறுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை சக்தி கரகமும், அதைத்தொடந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் விழாக்களும் நடைபெறும். கடைசி செவ்வாய்க்கிழமை மகா அபிசேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. சேலம் மாநகரில் எட்டுப்பேட்டைகளிலும் உள்ள மாரியம்மன் கோயில்களிலும் ஆடிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    பூப் போட்டு பார்த்தல்

    இத்திருக்கோயில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா? மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? தந்தைக்கு வந்திருக்கும் நோய் தீருமா? மகனுக்கு வேலை கிடைக்குமா? போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களைப் பொட்டலங்களாகக் கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்த்தால், நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு செல்வர், இதற்குப் பூப்போட்டு பார்த்தல் என்று பெயர். பக்தர்கள் பூப்போட்டு பார்த்து தம் பிரச்சனைகளைத் தீர்த்து செல்வதுண்டு. நோயால் பீடித்தவர்களும், துயர் கொண்டவர்களும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.

    வேண்டுதலும், நேர்த்திக்கடனும்

    மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள், ஐதீகங்கள் ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்கின்றோம். அது ஒன்றின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் தோன்றியவையாகும் என்பார்கள் அறிஞர்கள். பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அதனால் தான் தாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்களுக்கு அம்மனின் இசைவு பெற்றே செயல்படுகின்றனர்.

    கண்ணடக்கம் சாத்துதல்

    கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை பெரிய மாரியம்மனிடம், தமது கண்ணிற்கு ஏற்பட்ட நோயை நீக்குமாறு வேண்டிக்கொள்வர். அதன் காரணமாக நோய் நீங்கி நலமடைவர். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மாரியம்மனுக்கு பொன்னாலோ (அ) வெள்ளியாலோ (அ) தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள். சில நேரங்களில் திருக்கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.

    கம்பம் நடுதல்

    ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.

    இவ்விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும், மழை வளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாக பெண்கள் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரியம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.

    • இந்த திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது.
    • இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன.

    மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்

    தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை

    தல விருட்சம்:வில்வம்

    தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல்களில் 120 பாடல்கள் அதிபலன் கூடியவை. அவற்றில் முக்கியமானது திருஞானசம்பந்தர் பாடிய திரு வாடானை திருப்பதிகம். திருஞான சம்பந்தர், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார் என அத்தனை பேராலும் பாடல்பெற்ற திருத்தலம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம். பிரம்மாவின் வழிகாட்டுதல்படி நீலரத்தின மணியால் சூரியன் ஆதிரெத்தினேஸ்வரருக்குப் பூஜை செய்ததால் இதை ஆதிரெத்தினபுரம் என்றும் சொல்கிறது புராணம்.

    இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன. மணிமுத்தாறு, சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், வாருணி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் உள்ளன. பெரும்பாலும் திருக்கோயில்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும். ஆனால், ஆதிரெத்தினேஸ்வரருக்கு பாரிஜாதம், குருக்கத்தி, கடம்பம், வில்வம் ஆகிய நான்கு தல விருட்சங்கள்.

    இறைவன், இறைவி

    இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரிணி(நீராவி தீர்தம்) தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயும், கோவிலுக்கு முன்பு வருணன் தீர்த்தமும் (தெப்பகுளம்), கோவிலுக்கு மேற்கே வாருணி தீர்த்தமும் (மங்கல நாதன் குளம்), கோவிலுக்கு தெற்கே அகத்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மற்றும் மணிமுத்தாறு(மணிமுத்தா நதி) என்று ஆறு தீர்த்தங்கள் உள்ளன.

    வருண பகவானின் மகன் வாருணி சாப விமோசனம் பெற்று முனிவராக பிறப்பெடுத்து உருவான இடம். வாருணியின் மகனே நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன்.இங்குள்ள ஆதி ரத்தின லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர் சூரியபகவான், மகாபாரத காலத்திற்கு முன்பு கிருஷ்ணர் ராமராக அவதாரம் எடுத்த பொழுது ராமர் ராவணனுடன் போர் செய்ய போவதற்கு முன்பு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் அதற்கான உபதேசத்தை பெற்றார்.

    ராமாவதார காலத்தில் இறைவனிடமிருந்து தான் கற்ற இந்த உபதேசத்தை தனது கிருஷ்ண அவதாரத்தின் போது கீதையாக, கிருஷ்ணன் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மார்க்கண்டேயர், காமதேனு, சூரியன், அகத்தியர், திருஞானசம்பந்தர் ஆகியோர் அவரவர் வாழ்ந்த காலங்களில் பல யுகங்களில் தொடர்ந்து இங்குள்ள இறைவனை பலர் வழிபட்டு வந்துள்ளனர்.

    நீலரத்தினக்கல் லிங்கம்

    என்றும் பதினாறாய் வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயன் தனது பெற்றோருடன் வந்து இங்கு தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஆதிரெத் தினேஸ்வரர் லிங்கம் நீலரத்தினக் கல்லால் வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. தேவி, இங்கே சிநேக வல்லி அம்மையாக வீற்றிருக்கிறாள்.

    சாபம் நீங்கிய தலம்

    துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட தனது மைந்தன் வாருணிக்கு சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்கிறார் வருணன். 48 நாட்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி ஆதிரெத்தினேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று உபாயம் சொன்னார் சிவபெருமான். அதுபடியே வாருணிக்கு சாபம் நீங்கியதால் இத்திருத்தலத்தை நோய்நொடி தீர்க்கும் திருத்தலம் இன்றைக்கும் துதிக்கப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சங்களின் வேரிலிருந்து திருமண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டாலும் தண்ணீரில் கலந்து பருகினாலும் நோய் நொடிகள் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    விழாக்கள்

    இக்கோவிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன

    • அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.
    • இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர். இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,'துர்க்கம்மா' என்றும் அழைக்கிறார்கள். பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெற இந்த ஆலயத்தில் 'யட்சகானம்'என்ற வழிபாட்டை நடத்துகிறார்கள்.

    பழங்காலத்தில் இந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தை போக்குவதற்காக ஜாபாலி என்ற முனிவர்,தவத்தில் ஈடுபட்டார்.அந்த முனிவரின் தவம் சிறப்பானது என்பதால்,இப்பகுதியில் நிலவிய பஞ்சத்தைப் போக்க, தேவலோக தலைவனான இந்திரன் முடிவு செய்தான். அதற்காக தேவலோகத்தில் இருந்து காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று, வளம் சேர்க்கும்படி இந்திரன் அனுப்பி வைத்தான்.ஆனால் கர்மவினைகளால் பல பாவங்களைச் செய்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல நந்தினி பசு தயங்கியது.

    அந்த பசு,பார்வதியை சரணடைந்து தான் பூலோகம் செல்ல விரும்பவில்லை என்றுகூறியது. அப்போது பார்வதி தேவி, "நீ பசுவாகஅங்கே செல்ல வேண்டாம். அனைத்து பாவங்களையும் நீக்கும் வல்லமைபடைத்த நதியாக மாறி பூலோகம் செல். அத்துடன் உன்னுடைய நீர்த் தன்மையால் அந்தப் பகுதியை பசுமையாக்கு" என்று உத்தரவிட்டார்.அதன்படி 'நேத்திராவதி' என்ற பெயரில் இங்கு நந்தினி பசு, நதியாக ஓடத் தொடங்கியது.

    அந்த சமயத்தில் அருணாசுரன் என்றஅரக்கன், பூலோகத்தில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்துஉயிர்களைக் காக்கும் படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதிதேவி மோகினியாக வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன்,அவளைப் பின் தொடர்ந்தான்.நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்னால், ஒளிவது போல் மோகினி பாவனைசெய்தாள். அரக்கன் அவளைப் பிடிக்க முயன்றான். அப்போது மோகினியாக இருந்த பார்வதிதேவி, வண்டாக வடிவெடுத்து,அவன் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொன்றார்.

    உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.உக்கிரம் தணிந்த அன்னை,ஆற்றின் நடுவில் 'துர்க்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோவில் கொண்டாள். இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.அவருக்கு அம்மன் வடிவில் அலங்காரம் செய்கிறார்கள்.

    நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால்'கடில்' எனப்பட்டது. அதுவே தற்போது'கட்டீல்' என்று அழைக்கப்படுகிறது.கோவிலின் பின்பகுதியில் நேத்திராவதி ஆறு இரண்டாக பிரிந்து கோவிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் இருக்கும் காரணத்தால், இந்த ஆலயத்தின் கருவறை எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இந்த ஆலயத்தில் தீர்த்தம்,வளையல், மல்லிகை,மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை நீங்க, இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில், உடுப்பிசங்கரபுரம் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.திருமண வரம், குழந்தைப்பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.இவ்வாலயத்தில் மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாகதேவதை, பிரம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    மங்களூருவில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் கட்டீல் பகுதிஉள்ளது.

    • இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.
    • தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற் கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.

    இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.

    பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு 'கங்காதேஸ்வரர்' என்று பெயர்.

    கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    அதில் அவர், "இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.

    கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது" என்கிறார்.

    • புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது.
    • புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-

    பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.

    அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.

    என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது. பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.

    கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான்.

    அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

    புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.

    புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

    மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம்.

    அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.

    இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வழிபாடு செய்வார்கள். ஆடி மாதம் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் கர்ப்பமாக உள்ளபெண்கள் ஆடி மாதம் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பிரசவத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    ஆடி மாதம் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நம் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    குழந்தை வரம் கிடைக்கும்

    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

    செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

    • இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
    • ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

    அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    திருவிழாக்கள்

    தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.

    தேர்த்திருவிழா மகிமை

    பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.

    அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.

    அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.

    அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.

    தலவிருட்சம் வேப்பமரம்

    மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.

    பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்

    ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.

    இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

    தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

    சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,

    சமயபுரம்,

    மண்ணச்சநல்லூர் வட்டம்,

    திருச்சி மாவட்டம் - 621112.

    தொலைபேசி எண்

    0431- 2670460

    • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

    ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

    இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

    ஆலயத் தோற்றம்

    கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் - வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.

    இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவில் ஒன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான். இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது. மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.

    பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள். அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறு கோவில் ஒன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர். அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.

    தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்

    சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.

    கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.

    இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.

    வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏழுநிலை ராஜகோபுரம்

    2008 ஆம் ஆண்டு இத்திரு க்கோயிலின் நுழைவாயிலில் 83 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

    ஆதிகோனியம்மன் பின்னணி தகவல்கள்

    கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.

    இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.

    அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவை யில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.

    மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள்

    ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும். அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர். ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும். நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவரும் காட்சி தருவர்.

    இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.

    1. ஆடிவெள்ளிக்கிழமை 2. தை வெள்ளிக்கிழமை 3. நவராத்திரி 4. மாதப்பிறப்பு 5. பவுர்ணமி பூஜை 6. அமாவாசை 7. கார்த்திகை 8. தீபாவளி 9. தனுர் மாத விழா 10. தை பொங்கல்.

    கோனியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம்

    கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

    இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

    கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

    இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி யான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

    கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சய தார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

    கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்

    கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

    தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்

    இத்திருக்கோவிலில் 23-3-2002 முதல் தமிழக அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

    இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டியில் இருந்து வருடம் ஒரு நாளைக்கு தாங்கள் விரும்பும் நாளில் தங்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வருமான வரிசட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என மறைநூல்கள் கூறுகின்றன. அன்பர்கள் இச்சீரிய அன்னதான திட்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தும் தங்கள் பிறந்த நாள், தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் ரூ.3,500 திருக்கோவிலில் செலுத்தி குறைந்தது 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி அருள்மிகு கோனியம்மன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    நன்கொடைகளை வங்கி வரைவோலை மற்றும் பணிவிலை மூலமாகவும் அனுப்பலாம்.

    முகவரி, நிர்வாக அதிகாரி, அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அன்னதான நிதி, கோயமுத்தூர் 641 001.

    கோவில் நடை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். பின்னர் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    காலை 6.30 மணி-நடைதிறப்பு

    காலை 7 மணி-காலசந்தி பூஜை

    நண்பகல் 12 மணி -உச்சிகால பூஜை.

    பகல் 12.30 மணி -நடைசாத்துதல்

    மாலை 4.30 மணி -நடைதிறப்பு

    மாலை 7 மணி-சாயரட்சை பூஜை,

    இரவு 8.30 மணி-நடை சாத்துதல்.

    பூஜை கட்டண விவரம்

    அர்ச்சனை சீட்டு - ரூ.5

    தேங்காய் சீட்டு - ரூ.5

    மாவிளக்கு சீட்டு- ரூ.20

    உபய கட்டணச்சீட்டு - ரூ.20

    தனி வழி தரிசனம்- ரூ.25

    பால் அபிஷேகம் சீட்டு- ரூ.25

    குத்துவிளக்கு சீட்டு - ரூ.50

    விசேஷ நாட்கள் தனி வழி - ரூ.50

    ஆட்டோ, ஸ்கூட்டர் பூஜை- ரூ.50

    கார் பூஜை சீட்டு - ரூ.100

    அபிஷேக சீட்டு - ரூ.100

    புகைப்படம் எடுத்தல் - ரூ.150

    ஜமுக்காளச்சீட்டு - ரூ.200

    திருவிளக்கு வழிபாடு சீட்டு- ரூ.250

    உப்பு ஜவுளி - ரூ.500

    வீடியோ எடுத்தல் சீட்டு- ரூ.500

    தங்கப்பாவாடை சீட்டு- ரூ.1000

    கோவில் தொடர்புக்கு

    செயல் அலுவலர்,

    அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்,

    பெரியகடை வீதி,

    கோவை-641 001.

    தொலைபேசி எண்: 0422-2396821.

    website: www.kovai.koniamman.org, Email-ID: koniamman@bsnl.in

    ×