search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..
    X

    பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..

    பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
    பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.

    பொங்கலிடுவதிலும் சில விரத விதிமுறைகள், வரைமுறைகள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, காவி பூச வேண்டும். 

    அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும்.



    விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.

    பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும், மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.

    பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின்னர் அனைவருக்கும் பொங்கலை அளித்த வேண்டும். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
    Next Story
    ×