search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி 4-வது நாள்: சந்தான விருத்தி தரும் விரதம்
    X

    கந்தசஷ்டி 4-வது நாள்: சந்தான விருத்தி தரும் விரதம்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கந்தசஷ்டி விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.
    முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அதுவும் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி கந்தசஷ்டி ஆகும். முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும்.

    'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது. திருமண வீடுகளில் பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று சிலர் சொல்லிக் கொண்டிருப்பர்.

    ஆனால் அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை' எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட விதி மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள்அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி. உண்மையாக நாம் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.



    ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால், சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்களும் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கையும் அமையும்.

    ஆறுநாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி 17.11.2015 செவ்வாய்க்கிழமை வருகின்றது. முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றைய தினம் திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபடச் செல்கின்றனர். 'திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம், தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்' என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வப்படத்தை வைத்து வழிபடலாம்.



    புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்குபோன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    'முருகா' என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். 'மு' என்றால் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும், 'ரு' என்றால் 'ருத்ரன்' என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். 'க' என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனைக் குறிக்கும்.

    மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால் முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாகக் கிடைக்கும்.

    பெரியசாமி என்றழைக்கப்படும் கந்தசாமி தான் நமக்குச் சொந்தசாமி. அந்தச் சாமியை நாம் சஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால் சேமிப்பு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும்.

    நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
    கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
    எனக்கு முன்வந்து தோன்றிடினே!

    என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
    Next Story
    ×