search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வது எப்படி?
    X

    நவராத்திரி விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வது எப்படி?

    மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், விரதமிருந்து பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் அறிவோம்.
    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை நாம் மிக மிக விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். புத்தகங்கள், கலை கருவிகள், தொழிற்சாலை இயந்திரங்களை இவற்றிற்கு சந்தனம், குங்குமம் பூசி சாற்றி பூஜித்து சர்க்கரை பொங்கல், கொண்டைக்கடலை, சுண்டல் நைவேத்யம் என்பது நம் வழக்கத்தில் உள்ளது.

    விஜயதசமி அன்று வெற்றி நாள். சிறு குழந்தைகளுக்கு கல்வி, கலை ஆரம்பிப்பது இன்று மிக மிக சிறப்பானது. (பூஜை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. ஆத்மார்த்தமானது. வெளி பகட்டு ஆடம்பரங்கள் தேவையில்லை. எனவே ஒழுக்கமான பக்தியோடு அழகாக நவராத்திரி கொண்டாடுவோம்).

    சிறிய இடம் கொலு வைக்க நகர் புறங்களில் சவுகர்யம் இல்லை. நேரம் இல்லை என்று அங்கலாய்க்கத் தேவையில்லை. மனம் தான் கோவில் சிறிய அலமாரி அல்லது ஒரு தட்டு இருந்தால் கூட போதும். முதலில் அதனை நன்கு சுத்தம் செய்யுங்கள். அதனை மேலும் கீழும் உள்ள சாமான்களை முறையாய் அடுக்கி வையுங்கள். புத்தகங்கள், வாட்ச், செல்போன் போன்றவை மற்ற பொருட்களை 10 நாட்களுக்கு சிறிது இடம் மாற்றி வையுங்கள். தரையில் கூட மனைபோட்டு செய்யலாம். பூஜை செய்யும் இடம், அல்லது ஏற்கனவே சாமி படங்கள் இருக்கும் இடத்தினை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குங்கள்.

    மாலை அமாவாசை அன்று சாமி படங்களை நன்கு துடைத்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுங்கள். இவற்றில் பூக்களை வையுங்கள். குத்து விளக்கோ, காமாட்சி விளக்கோ, அகல் விளக்கோ நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் இடுங்கள். நெய் விட்டு விளக்கேற்றுவது மிகச் சிறந்தது. நெய்யினை சுத்தமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை சுடுநீரினுள் வைத்தால் உருகிவிடும். நேராக அடுப்பில் வைத்து சூடு செய்யாதீர்கள். நெய் ஊற்றிய பின்பு திரியை அதில் அனைத்து விளக்கு ஏற்றுங்கள்.

    விளக்கிற்கு பூ சூட்டுங்கள், ஊதுவத்தி, சாம்பிராணி ஏற்றுங்கள். வீடும் சுத்தமாக இருக்க நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். எல்லா மொழிகளும் அழகானவையே. சமஸ்கிருதத்திற்கு தேவ பாஷை என்ற பெயர் உண்டு. அம்பிகையை போற்றி அநேக ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் உண்டு. ஆனால் அதனை தவறாக உச்சரிக்கக் கூடாது. எனவே நல்ல தமிழ் பாடல்கள், அபிராமி அந்தாதி போல் உள்ளன. அவைகளில் உங்களால் முடிந்ததனை 5 நிமிடம் கூட படியுங்கள். ஆரம்பிக்கும் பொழுது கணபதியினை வணங்கி, குருவினை வணங்கி பின்னர் அம்பிகை வழி பாட்டினை செய்ய வேண்டும். பூஜையில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கலந்த சாதம் பாயசம், வடை என செய்வது சம்பிரதாயம்.

    2 வெற்றிலை, 1 பாக்கு, 2 மஞ்சள் கிழங்கு, உங்களால் முடிந்த பழம், முடிந்தால் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள். பழங்களோ மிக உயர்ந்த நைவேத்தியம், ஏனெனில் பழங்கள் மிகவும் சுத்தமானது. வேண்டிய நாளன்று தேங்காய் உடைக்கலாம் தேங்காய் உடைத்து வழிபடுவது மன கஷ்டங்களை உடைக்கும் என்ற தொரு நம்பிக்கை உண்டு.



    சுத்தமான நீர் கொண்டு நைவேத்தியங்களை மூன்று முறை சுற்றி தரையில் நீரை விட்டு விடுங்கள். ஆரத்தி எடுப்பதில் நெய் தீபம் கொண்டு தீப ஆரத்தி செய்யலாம். மாலையில் சுத்தமான தட்டில் நீர் விட்டு சுண்ணாம்பு, மஞ்சள் கலந்து ஆரத்தி எடுத்து வாசலில் கோலத்தின் மேல் விட்டு விடலாம். முடிந்தவரை அரிசி மாவு கோலமே போடுங்கள். ஒரு கொத்து மாவிலையினை வீட்டின் முனைப்பில் தொங்க விடுவது வீட்டின் பண்டிகையினைக் குறிக்கும். அது போலத்தான் கோலத்தில் செம்மண் இடுவதும் வீட்டின் விசேசத்தினைக் குறிக்கும்..

    பெண்கள் நவராத்திரி துவங்கும் முன்பு வீட்டிலேயே மருதாணி அரைத்து இட்டுக் கொள்ளலாம். கண்ணாடி வளையங்கள் அணியலாம். இவை மனதினை உற்சாகமாய் வைக்கும். பண்டிகை துவங்கும் முன்பே அசைவ உணவு உண்பவர்கள் அதனை நிறுத்தி விடலாமே. அது போன்று பூஜை அறையில் இயன்றவர்கள் அலங்கார தோரண மின் விளக்குகளை வைக்கலாம். ஒரிருவருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை நிறத்தில் சட்டை துணி வைத்துக் கொடுக்கலாம்.

    பொரி, கடலை, வெல்லம், அவல் ஆயுத பூஜை அன்று செய்யப்படும் நைவேத்தியங்களில் சிறந்தது. பூஜை சாமான்களில் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். செம்பு மிக சக்தி வாய்ந்தது. கலசமாக வைத்து பூஜை செய்பவர்கள் கலச நீரினை பூஜை முடிந்த பிறகு வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். அன்றாடம் ஒரு சுண்டல் என்பது உங்கள் பொருளாதாரம், நேரத்தினைப் பொறுத்து அமையட்டும்.

    பொதுவில் மந்திரங்களை உபதேசம் பெற்றே சொல்ல வேண்டும் என்பது விதி. எனவே அவரவர் குடும்ப வழக்கப்படியே செய்வது நல்லது. மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் அறிவோம்.
    Next Story
    ×