search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்கியமான விரதங்களும்... பலன்களும்...
    X

    முக்கியமான விரதங்களும்... பலன்களும்...

    இந்து சமயங்களில் போற்றப்படும் விரதங்களும் அந்த விரதத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    பிரதோஷம்:

    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

    தை அமாவாசை விரதம்:

    நாள் : தை அமாவாசை
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
    பலன் :முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
    சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மங்களவார விரதம்:

    நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
    தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
    விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
    பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

    உமா மகேஸ்வர விரதம்:

    நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
    தெய்வம் : பார்வதி, பரமசிவன்
    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
    பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    கல்யாணசுந்தர விரதம்:

    நாள் : பங்குனி உத்திரம்
    தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
    விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
    பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

    சூல விரதம்:

    நாள் : தை அமாவாசை
    தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
    விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
    பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்



    இடப விரதம்:

    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
    தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
    விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
    பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

    தைப்பூச விரதம்:

    நாள் : தை மாத பூச நட்சத்திரம்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
    பலன் : திருமண யோகம்

    முருகன் சுக்ரவார விரதம்:

    நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்ரமணியர்
    விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
    பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

    கிருத்திகை விரதம்:

    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
    பலன் : 16 வகை செல்வமும் கிடைக்கும்.

    சுக்கிரவார விரதம்

    சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிர வாரம் தொடங்கி (வெள்ளிக்கிழமை) பிரதி சுக்கிர வாரமும் உமா தேவியாரை முன்னிட்டு அனுஷ்டிக்கும் விரதம் சுக்கிர வார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்றும் அழைப்பார்கள்.
    இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு உட்கொள்ள வேண்டும். அம்பாளைப்பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். மாலைப்பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்து விளக்கை ஏற்றி வைத்து பூசிக்கலாம்.
    கோவிலுக்குச்சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம். தேவிக்குவிளக்கு ஏற்றும்பொழுது ஐந்து வகை எண்ணெயை ஊற்றி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அம்பாளை வழிபட்டு சுக்கிர வார விரதம் மேற்கொள்ளுவதால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.
    Next Story
    ×