search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரியத்தடை நீக்கும் சதுர்த்தி விரதம்
    X

    காரியத்தடை நீக்கும் சதுர்த்தி விரதம்

    காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட, உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார்.
    விநாயகரை சிறப்பாகப் பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும். அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.
    வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு. கார்த்திகை மாதத்தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும் விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்பு பூஜை செய்ய வேண்டும். பூஜைக்கு உரிய பொருட்கள்- நல்லெண்ணெய், பசும்பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், பூ முதலியவை.

    முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும். இதை பூஜை ஆரம்பிக்கும் அன்று செய்யக்கூடாது. இந்த ஒரே பிள்ளையாரைத்தான் நாற்பது ஐந்து தினங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். எனவே பத்திரமாகக் கையாள வேண்டும்.

    குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி விளக்கேற்றி வைத்து, பிள்ளையாரை ஒரு சிறு மேடையில் வைக்க வேண்டும். பிறகு அபிஷேகத்தை தொடங்கலாம்.
    முதலில் நல்லெண்ணெய் அபிஷேகம் முறைப்படி செய்தல் வேண்டும். பிறகு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் எல்லாம் செய்து முடித்து பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் முதலியவற்றால் பொட்டு இட்டு பூ சூட்டவும்.
    தேங்காயை உடைத்து வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்யவும். எளிமையான முறையில் அமைய வேண்டும் என்று நினைத்தால் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தலாம். பிறகு தீபாராதனை செய்யவும்.

    விநாயகர் கவசம், விநாயகர் துதிப்பாடல்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும். பாராயணத்தை முடித்த பின் மறுபடியும் கற்பூர ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட, உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார். இது மட்டுமல்ல, விநாயகருக்குள் சகல சக்திகளும் அடக்கம். ஆதலால் அவர் சகல சவுபாக்கியங்களையும் தருவதுடன் முக்தியும் அருளுவார்.
    Next Story
    ×