search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் மாதமும்... ஆடிப்பெருக்கு விரதமும்...
    X

    அம்மன் மாதமும்... ஆடிப்பெருக்கு விரதமும்...

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.
    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். இந்த மங்கல திருவிழா வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர்.

    பூமாதேவி அவதரித்தது இம்மாதத்தில் என்பதால் ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகின்றன. ‘ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. அன்று ஆறுகளில் நீர்ப் பெருக்கு உண்டாகி, ‘நீரெல்லாம் காவிரி நிலமெல்லாம் வைகுந்தம்’ என்பதற்கேற்ப எல்லா நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடி நுங்கும், நுரையுமாக வரும். இந்த புது வெள்ளம் காணும் மக்கள் உள்ளத்தில் பேரானந்தத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் தம் வயலில் நெல் மற்றும் காய்கறி விதைகளை தூவி நல்ல விளைச்சல் காண இறைவனை வேண்டி கற்பூரம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபடுவர்.

    ஆடி மாதத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகத்தில் அதிக மழை பெய்து, அங்கிருந்து புதுவெள்ளம் டெல்டா மாவட்டங்களின் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும். இதனை ஆற்றுப்பெருக்கு என்பர்.

    “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
    வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
    எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

    என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.



    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    புதுமண தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அங்கேயே களைந்து விட்டு புத்தாடை அணிந்து கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று பூஜை செய்து வழிபடுவர். திருமணத்தன்று மணமக்கள், சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று அதை ஆற்றில் விடுவார்கள். பின்னர் ஆற்றினை வணங்கி வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி அதனை ஆற்றில் விடுவார்கள்.

    திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

    பெண்கள் விரதமிருந்து முளைப்பாரியை கைகளில் ஏந்திக்கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்து வாழ்வில் எல்லா வளமும் பெருக வேண்டும் என்று பூஜைசெய்து முளைப்பாரியை காவிரியில் விட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவர். இப்படி செய்தால் நீர்வளம் பெருகியது போல் அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆறுகள் இல்லாத ஊர்களில் வாழும் மக்கள் அப்பகுதியில் இருக்கும் குளங்கள், நீர் நிலைகள், ஏரி போன்ற நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள்.

    செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம் :

    வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.

    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும். செல்வ செழிப்பு நிறைந்திருக்கும். குழந்தை செல்வம் உண்டாகும்.
    Next Story
    ×