search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று ஆடி செவ்வாய்: விரதம் இருக்கும் முறை
    X

    இன்று ஆடி செவ்வாய்: விரதம் இருக்கும் முறை

    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். செவ்வாய் விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

    கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 15)அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

    இந்த ஆண்டு ஆடி மாதம் 5 செவ்வாய்க்கிழமை வருகிறது. அதாவது ஜூலை மாதம் 18, 25 ஆகஸ்டு மாதம் 1, 8, 15-ந் தேதிகளில் செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிக மிக நன்று.

    ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனத்திற்குச் செந்நிறக் கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடவேண்டும்.

    ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளை திருநாளாக கொண்டாடுவது தனிச்சிறப்பு. அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி! ‘கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது’ என்று பெரிய வர்கள் சொல்வார்கள்.

    கடைசி ஆடிச்செவ்வாய் அன்று வருடத்திற் கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×