search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்
    X

    செல்வம் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்

    ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் கடைபிடித்து வந்தால் பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.
    “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹாசிவராத்திரி விரதம், பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விரதங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கும் விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.

    ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடைத்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராமணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல், பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். தவிர வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.

    குபேர பகவான் படம், யந்த்ரம் அல்லது கலசத்திலோ ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். முதலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்துவிட்டு குபேர பகவானை பூஜை செய்வது உத்தமம். நவக்கிரஹ தான்யங்கள் வைத்து அதில் நவக்கிரஹங்களை ஆவாஹனம் செய்து நவக்கிரஹங்களுடன் குபேர பூஜையை சேர்த்து செய்யலாம். குபேர பூஜையுடன் லோக பாலகர்களையும் நவக்கிரங்களையும் சேர்த்து பூஜிக்கும் வழக்கம் உண்டு.



    கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து பூஜிப்பது விசேஷம்.

    இப்பூஜையை விரிவாக செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து அவர் மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

    விரிவாக செய்வதானால் ஸ்ரீசுக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் அர்ச்சித்து விமரிசையாக பூஜை செய்யலாம்.

    ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா

    என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

    இந்த விரதத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் கடைபிடித்து வந்தால் பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.
    Next Story
    ×