search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைப் பேறு அருளும் தத்தாத்ரேயர் விரதம்
    X

    குழந்தைப் பேறு அருளும் தத்தாத்ரேயர் விரதம்

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    மும்மூர்த்திகளின் ஒரே உருவமாக கருதப்படுபவர் தத்தாத்ரேயர். இவர் மாயையை வென்றவர் என்பதைக் காட்டிலும், மாயையே உருவானவர் என்பதே சரியானதாக இருக்கும். அவரது பல்வேறு சோதனைகளையும் தாண்டியபடி, அவரின் மாயையை உணர்ந்தவர்கள் மட்டுமே அவரது சீடர்களாக இருந்துள்ளனர். அத்ரி- அனுசுயை தம்பதியரின் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். இவர் அனுசுயையின் மகனாக கிடைத்தது இறைவனின் திருவிளையாடல்.

    சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தங்களின் மகனாக பிறக்க வேண்டும் என்று அனுசுயை விரதம் இருந்து வந்தார். பதிவிரதையான அவரது தவத்திற்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டிய கட்டாயம் மும்மூர்த்திகளுக்கும் ஏற்பட்டது. இதுபற்றி மும்மூர்த்திகளும், தங்களின் மனைவிகளிடம் கலந்துரையாடினர். அப்போது மும்மூர்த்திகளின் மனைவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர், ‘அனுசுயையின் பதிவிரதத்தை பரிசோதனை செய்து, அதில் அவர் வெற்றி பெற்றால் வரத்தை வழங்குங்கள்’ என்று தெரிவித்தனர்.

    சோதனை ஒன்றை வைக்கும்போது, அதை அனுசுயையால் சமாளிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர். இதையடுத்து மும்மூர்த்திகளும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயையின் குடிலுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அத்ரி முனிவர் தவத்தில் இருந்தார். தன் இல்லம் தேடி வந்தவர்களுக்கு உணவளித்து உபசரிப்பதே, நல்ல இல்லாளின் கடமை என்பதை உணர்ந்திருந்த அனுசுயை, அவர்களுக்கான உணவுகளை தயார் செய்தார்.

    பின்னர் உணவுகளை அவர்களுக்கு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளும், ‘நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.

    உடனே அனுசுயை, தன் கணவரின் கமண்டலத்தை எடுத்து அதில் இருந்து சிறிது நீரை கையில் ஊற்றி, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளின் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறிப்போனார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறி, மூவரையும் தொட்டிலில் தூங்கச் செய்தார்.



    இந்த நிலையில் அனுசுயையின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், வெகு நேரமாகியும் திரும்பாததால், முப்பெரும் தேவியர்கள் மனம் கலங்கினர். என்ன நடந்தது? என்பதை அறிவதற்காக அனுசுயையின் குடிலை நோக்கி வந்தனர்.

    அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயையின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயையிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

    இதையடுத்து அனுசுயை, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

    பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயை- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு அனுசுயை, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.

    இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயை தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    Next Story
    ×