search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச ஏகாதசி விரதம்
    X

    முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச ஏகாதசி விரதம்

    வைகுண்ட ஏகாதசி(மோட்ச ஏகாதசி) என அளக்கப்படும் இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.
    மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி மோட்ச ஏகாதசி எனப்படும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என ஸ்வாமியே சொன்ன மார்கழியில் வரும் இந்த ஏகாதசி மிக மிக சிறப்பு வாய்ந்தது.

    வைகுண்ட ஏகாதசி என அளக்கப்படும் இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.
    வைகுண்ட ஏகாதசியின் மகிமைப் பற்றிய ஒரு கதை வருமாறு:-

    கம்பம் என்னும் நகரை மன்னர் வைகானாசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் இரவு மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

    உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, "மகனே, நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது ஒரு வழி செய்யமாட்டாயா?'' என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் மன்னர்.



    "மன்னா! பர்வதர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும், அவரிடம் போ'' என்று வழி காட்டினார்கள்.

    மன்னர் உடனே பர்வதரை தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவை சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார். உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர், பின் கண்களைத் திறந்து எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார். "வைகானசா உன் தந்தை அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய் தான்.

    சேர வேண்டிய காலங்களில் தன்னைச் சேரும்படி மனைவி வேண்டியும், அவளை மதிக்கவில்லை. அவள் பார்வையில் இருந்தே விலகி போனான். இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும் என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.

    நீ உன் மனைவி மக்களுடன் மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து பரவாசுதேவனான பகவானை பூஜை செய். அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொன்னார் பர்வதார்.

    மன்னனும் விதிப்படி மோட்ச ஏகாதசி விரதம் இருந்து பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் மன்னர் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார்.

    எனவே நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி வரக் கூடிய ஏகாதசி இது.
    Next Story
    ×