search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சி காமாட்சி அம்மனுக்கு உகந்த ஆறு வார விரத வழிபாடு
    X

    காஞ்சி காமாட்சி அம்மனுக்கு உகந்த ஆறு வார விரத வழிபாடு

    உள்ளத்தில் உண்மையான பக்தி சிரத்தையோடு, அம்பிகையைப் போய் வழிபட்டு வந்தால் அவளது அருளைப் பெற்று ஆனந்தம் அடைந்தவர்கள் அனேகர் உண்டு.
    உலகில் பிறந்துவிட்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் மனக்குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். கவலைகளைப் போக்குவதற்கே அன்னை “காமாட்சி”யாக ‘மாங்காடு பதி’யினிலே வடிவெடுத்திருக்கிறாள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன. அதுபோல் மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் “ஆறு வார விரத வழிபாட்டு முறையாகும்”.

    “ஆறுவார வழிபாடு” என்பது ‘ஆறு முழுமையான வாரங்கள்’ நமது கோரிக்கையை வைத்து அம்மனை வழிபடுவதாகும். முதல் வாரம் செல்லும் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்ற அர்ச்சனைப் பொருட்களுடன் மிக முக்கியமாக “இரண்டு” எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு சென்று, உங்கள் வேண்டுதலை அம்மனிடம் சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    ஸ்ரீ அர்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய ஸ்ரீ ஆதிகாமாட்சியை தொழுதுவிட்டு, ஸ்ரீதபஸ் காமாட்சியை வணங்குகையில் நாம் வருவது எத்தனையாவது வாரம் என்று சொன்னால் “ஒரு” எலுமிச்சையைத் தருவார்கள். அதைக் கொண்டு வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வருதல் வேண்டும். இப்படி முதல் வார வழிபாடு முடிந்து அடுத்த வாரம் செல்கையில் வீட்டில் பூஜித்த எலுமிச்சையுடன் புதிதாக ஒன்றை வாங்கி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

    இம்முறையும் ஸ்ரீ தபஸ் காமாட்சி சன்னதியில் ஒரு எலுமிச்சையைப் பெற்று வந்து இரண்டாவது வார விரத வழிபாட்டை வீட்டிலேயே அனுஷ்டிக்க வேண்டும். இது போன்றே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வாரமும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ காமாட்சியைத் தொழுது எலுமிச்சை பழையது+புதியது இரண்டையும் கொடுத்து சன்னதியில் தரும் எலுமிச்சையைக் கொண்டு வந்து வீட்டில் பூஜிக்க வேண்டும். ஆறாவது வார விரத வழிபாட்டை வீட்டில் முடித்தவுடன் ஏழாவது முறையாக ஆலயத்திற்குச் சென்று ஆறுவார வழிபாட்டினை முறையாக முடிக்க வேண்டும்.

    நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். முதல் வாரம் எந்தக் கிழமையில் செல்கின்றீர்களோ அதே கிழமையில் அடுத்த வாரம் செல்லும் போதுதான் முதல் வார வழிபாடு பூர்த்தியாகிறது. மூன்றாவது முறை செல்லும் போது இரண்டாவது வார வழிபாடு பூர்த்தியாகிறது. அதே போன்று அதே கிழமைகளில் ஏழாவது முறை செல்லும் போதுதான் ஆறு வார விரத வழிபாடு பூர்த்தியாகின்றது.

    அப்படி விரதம் பூர்த்தியாகும் நாளன்று அர்ச்சனைப் பொருட்களுடன், நன்கு காய்ச்சிய பாலுடன் ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம்,தேன் போன்றவற்றை வீட்டிலேயே கலந்து உங்கள் வசதிப்படி எந்த அளவு முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து அம்மனுக்கு நிவேதனம் செய்து பிரகாரத்தில் உள்ள பக்தர்களுக்கு விநியோகித்து ஆறுவார வழிபாட்டினை முடிக்க வேண்டும். சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் நிவேதனப் பாலை வழங்கலாம். இது பால் பிரியளான அம்மனுக்கே கொடுத்தது போலகும். இம்முறை எலுமிச்சையை வாங்குதல் கூடாது.

    இப்படி தொழுதால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி. முடிந்தால் முதல் வாரம் செல்லும் கிழமைகளிலேயே மற்ற ஆறு வாரங்களும் சென்று வந்தால் நலம். ஆனால் பெண்களுக்கு இது அவ்வளவாகப் பொருந்தாது. அப்போது மாற்றுக் கிழமைகளில் சென்று வரலாம். தவறில்லை. ஆறுவார வழிபாட்டின் போது ஆறுவாரப் பாடல்கள் மற்றும் துதிப் பாடல்களைப் பாடித் துதித்தால் வெற்றி நிச்சயம். மேலும் வீட்டில் எலுமிச்சையை வைத்துப் பூஜிக்கும் போது ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய காமாட்சி அம்மன் படத்தின் முன் வைத்து அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும்.

    உள்ளத்தில் உண்மையான பக்தி சிரத்தையோடு, நாம் அம்பிகையைப் போய் வழிபட்டு வந்தால் போதும். ஆறுவாரம் என்ன? ஆறு நாட்களிலேயே, ஆறுமணி நேரத்திலேயே கூட அவளது அருளைப் பெற்று ஆனந்தம் அடைந்தவர்கள் அனேகர் உண்டு.

    ஆனால், காரியம் கைகூடி விட்டது என்பதற்காக ஆலய தரிசனத்தை நடுவே நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து ஆறுவார காலம் மேற்கூறிய முறைப்படி அதனைச் செய்தே தீர வேண்டும். அத்துடன்,அம்பிகையை வழிபடச் செல்பவர்கள் பக்கத்திலுள்ள அருள்மிகு பார்கவேஸ்வரர் ஆலயத்தையும், ஸ்ரீ வைகுண்டநாதர் ஆலயத்தையும் தரிசித்து வருவது, மிகவும் விசேஷமான சுபபலன்களை விரைவில் பெறுவதற்குரிய வழியாகும்.
    Next Story
    ×