search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பயத்தை விரட்டும் பைரவர் விரத வழிபாடு
    X

    பயத்தை விரட்டும் பைரவர் விரத வழிபாடு

    பைரவ விரத வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து வருகிறார். அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் காணப்படுபவர் இவர். பைரவர் என்பதற்கு பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தைப் போக்குபவர் என்று பொருள்.

    சிவனுக்கு இருக்கும் ஐந்து தலைகளைப் போன்றே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதனால் பிரம்மா, ‘தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் என்னையே வணங்க வேண்டும்’ என்று கட்டளை விதித்தார்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும், சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய ஈசன், பைரவரைத் தோற்றுவித்தார். ஈசனிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர் கோபத்துடன் சென்று, பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி தன் கைகளில் ஏந்திக்கொண்டார். பிரம்மனின் தலையை துண்டித்ததால், பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அந்த தோஷம் விலகுவதற்காக கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி, பிச்சை எடுத்த வண்ணம் உலகம் முழுவதும் வலம் வந்தார். காசியில் அவர் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அவர் காசியை பாதுகாக்கும் காவலராக இருந்து அருளாசி புரிந்து வருகிறார்.

    அந்தகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, பைரவரை ஈசன் தோற்றுவித்தார் என்றும் கூறப்படுகிறது. பைரவர் 64 வடிவங்களில் உருவமெடுத்து அரக்கர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தற்போது அவற்றுள் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது. அந்த அஷ்ட பைரவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சக்தி பெயர்கள்:-

    அசிதாங்கபைரவர் (பிராம்ஹி), குரு பைரவர் (மகேஸ்வரி), சண்டபைரவர் (கவுமாரி), குரோதான பைரவர் (வைஷ்ணவி), உன்மத்தபைரவர் (வராகி), கபாலபைரவர் (மகேந்திரி), பீஷணபைரவர் (சாமுண்டி), சம்ஹாரபைரவர் (சண்டிகாதேவி).

    பல வரங்களைத் தரும் பைரவரை விரதமிருந்து வழிபடுவதற்கு சாலச் சிறந்த தினமாக அஷ்டமி திதி உள்ளது. அன்றைய தினம் அஷ்ட லட்சுமிகளும், பைரவரை விரதமிருந்து வழிபடுவதாக ஐதீகம். அதே நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வழிபாடு செய்தால் பொன், பொருள், ஐஸ்வரியத்துடன் சகல சவுபாக்கியங் களும் கிடைக்கும்.

    பைரவ விரத வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை விரதமிருந்து வணங்கி வருவதுடன், காலபைரவ அஷ்டக துதியை பாராயணம் செய்து வந்தால், எதிரிகளின் தொல்லை அகலும். எம பயம் நீங்கும். கடன் தொல்லை விலகும்.
    Next Story
    ×