search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருப்பங்களை நிறைவேற்றும் சந்தோஷி மாதா விரதம் இருக்கும் முறை
    X

    விருப்பங்களை நிறைவேற்றும் சந்தோஷி மாதா விரதம் இருக்கும் முறை

    நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சந்தோஷி மாதா விரதத்தை தொடர்ச்சியாக அனுஷ்டிப்பது சிறப்பு தரும்.
    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.

    நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக அனுஷ்டிப்பது சிறப்பு தரும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.

    சென்னையில் ஆலயம் :

    சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில், பரிபூரண விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் சந்தோஷி மாதாவிற்கு தனியாக சிறிய சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. விநாயகப்பெருமானின் புதல்வியாக சந்தோஷிமாதா வணங்கப்படுகிறாள். பத்மாசனத்தில் அமர்ந்து, மேல் இரு கரங்களில் கத்தியையும், சூலத்தையும் தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களில் அபய முத்திரையையும், பொற்கிண்ணத்தையும் ஏந்தி தரிசனம் அளிக்கிறாள்.

    இந்த அன்னையிடம் நேர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, புளி சேர்க்காமல் சமையல் செய்து எட்டு சிறுவர்களுக்கு உணவளித்தால், எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ரக்‌ஷாபந்தன் திருவிழா, லட்சார்ச்சனைப் பெருவிழா, விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் உள்ள சந்தோஷி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, சந்தோஷி மாதாவை வேண்டிக்கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    சென்னை தவிர, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பகுதிகளிலும் சந்தோஷி மாதாவிற்கு ஆலயம் உள்ளது. இந்தியாவில் வட மாநிலங் களில் இந்த அன்னைக்கு புகழ்பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.
    Next Story
    ×