search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)
    தனக்கும், தன் அருகில் வாழும் மனிதர்களுக்கும் பேச்சுக்களாலும், செயல்களாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே சமூக ஒழுக்கம். வாழும் காலமெல்லாம் இவை நம்முடன் பயணிப்பது, நம்மை மேன்மக்களாக சமூகத்தில் உயர்த்தச் செய்யும்‌. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடன் அன்போடு பழக இவ்வாறு வழி காட்டுகிறது இஸ்லாம்:

    “மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

    “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    வீதிகளில் அமரும் போதும், வீதிகளைக் கடக்கும் போதும் சில ஒழுக்கங்களை இஸ்லாம் போதிக்கின்றது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல், சாலைகளை கடப்பவர்களுக்கு உதவுதல், அவர்களுக்கு அரணாக மாறுதல் தர்மம் என்கிறது இஸ்லாம். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

    ‘நீங்கள் பாதைகளில் அமர்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். ‘நாங்கள் அமர்ந்து பேசுவதற்கு வேறு இடம் இல்லையே’ என்று நபித் தோழர்கள் வினா எழுப்பினர். ‘அப்படியென்றால் பாதைக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்’ என்று நபி (ஸல்) கூற, ‘பாதைக்கான கடமைகள் என்றால் என்ன?’ மறுபடியும் நபித் தோழர்கள் கேட்க, ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், தொந்தரவு செய்யாமல் இருங்கள், முகமன் கூறுங்கள், நல்லவற்றை ஏவி தீமைகளைத் தடுங்கள்’ என்று பாதைகளுக்கான கடமைகளைப் பட்டியலிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    நம்மையும், நம்மைச் சுற்றியும் வசிக்கும் மாற்று மத நண்பர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும். இதை இறைவனே தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)

    ‘ஒருவர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார், (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    தும்மும் போது கைக்குட்டையைக் கொண்டு மூடிக்கொள்ளுதல், கொட்டாவி விடும் நேரத்தில் கைகளால் வாயை மூடிக் கொள்ளுதல், எச்சில் துப்பினால் மண் கொண்டு மூடுதல், சபை நாகரீகம் கருதி பேசுதல், இவை அனைத்தும் சமூக ஒழுக்கத்தின் முக்கிய தூண்களாகும். பேச்சுகளையும், செயல்களையும் மனித சமூகத்திற்கு எதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது சமூக ஒழுக்கமாகும். இதைப் பேணுதலில் உலக அமைதி பிறக்கிறது. சமூக ஒழுக்கத்தை திருக்குர்ஆனும், நபி மொழியும் பல இடங்களில் இவ்வாறு பதிவு செய்கின்றன.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    நாகூர் தர்காவின் 465-வது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக் கட்டைகளை கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
    உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ந்தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!
    “நபி (ஸல்) அவர்கள், முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை ஏமன் தேச ஆளுநராக நியமித்து, வழியனுப்பும் போது, ‘முஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில், அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    உலக ஆளுநர்களுக்கு உத்தம நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய உபதேசத்தை, ஓர் அழகிய அறிவுரையை, ஓர் அழகிய செய்தியை ஆளுநர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் வழியாக வழங்கியுள்ளார்கள்.

    ஆளுநர் என்பவர் நாட்டின் நீதி, நிர்வாகத்தை கவனிப்பவர். மேலும், அவர் மக்கள் பணியில் ஈடுபடுபவர். குடிமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். அவரால் குடிமக்களுக்கு எந்தப் பிரச்சினையும், எந்தவித அநீதியும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதினால் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓர் அறிக்கையை நபி (ஸல்) சமர்ப்பித்துள்ளார்கள்.

    மக்களுடன் கலந்து வாழ்வோர், மக்களின் மீது படைபலம், பணபலம், உடல்பலம் மூலம் ஆதிக்கம் செலுத்துவோர், மக்கள் பணியில் ஈடுபடக்கூடிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், நீதியரசர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாவரும் மக்களின் மனம் கவர்ந்த நீதிவான்களாக செயலாற்ற வேண்டும். மக்கள் புண்படும் அளவுக்கு அநீதியாக நடக்கலாகாது. ஒருவேளை அநீதியாக நடந்தால், அநீதி இழைக்கப்பட்டோரின் சாபம் அவர்களை சும்மாவிடாது, துரத்திக் கொண்டே இருக்கும்.

    ‘மூவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 1) பெற்றோரின் துஆ, 2) பயணியின் துஆ, 3) அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    மற்றொரு நபிமொழியில், “மூவரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாது. 1) நீதியான ஆட்சியாளர், 2) நோன்பாளி அவர் நோன்பு திறக்கும் நேரம், 3) அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையாகும். இந்த பிரார்த்தனை மேகங்களுக்கு அப்பால் உயர்த்தப்படுகிறது; இதற்காக வானங்களின் கதவுகள் திறக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த இறைவன் கூறுவான்: ‘உனக்கு நான் நிச்சயம் உதவி செய்வேன்; அது எவ்வளவு காலம் இருந்தாலும் சரியே!’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை கண்டு கொண்டு, அதை மேகங்களுக்கு அப்பால் சுமந்து கொண்டு, வானத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு செல்வதற்கென சில வானவர்களை இறைவன் நியமித்துள்ளான். அந்த பிரார்த்தனையை அனைத்து வானவர்களும் கண்டு கொள்கின்றனர். இதனால் அவர்களின் சிபாரிசும், இறைவனின் கிருபையும், உதவியும் அநீதி இழைக்கப்பட்டவனுக்கு கிடைத்து விடுவதுடன் அவனது பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! அது நெருப்பின் ஜூவாலையைப் போன்று வானத்தை நோக்கி மேலே செல்கிறது என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம்)

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள்! அவன் பாவியாக இருந்தாலும் சரியே! மேலும், அவர் இறைமறுப்பாளராக இருந்தாலும் சரியே! ஏனெனில் அதற்கு திரையேதுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணம் அவனுக்கு இறைவனின் உதவி கிடைக்கும் என இறைவனின் வாக்குறுதியும், அவர் விஷயத்தில் இறைவன் தமது பொறுப்பை ஏற்கிறான் எனும் பெருந்தன்மைதான். மேலும், தமக்கு பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு பதிலடி கொடுக்க இயலாத காரணமாக அவனுக்கு பதிலடியாக இவர் இறைவனிடம் இறைஞ்சும்போது உடனே இறைவன் இவருக்கு துணையாக இருந்து, இவரின் பிரார்த்தனையை உடனடியாக ஏற்கிறான்.

    இறைவன் இறைநம்பிக்கையாளரை நேசிக்கின்றான். ஆனால், நீதி என்று வரும்போது அவனின் நீதி நல்லவரையும், தீயவரையும், இறைவிசுவாசியையும், இறைமறுப்பாளரையும் அரவணைத்துக் கொள்கிறது. இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    நாகூர் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து வழக்கமாக 10-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கொடி ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் காரணமாக மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்னரதம், உள்ளிட்ட 8 கப்பல்களில் மட்டுமே கொடி ஊர்வலம் நடந்தது.

    மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் அலங்கார வாசல் வந்ததைடந்தது. தொடர்ந்து கொடிகள் நாகூர் தர்காவின் 5 மினராக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதினார்.

    மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13-ந் தேதி(வியாழக்கிழமை) நடைக்கிறது. பெரிய ஆண்டவர் சமாதிக்கு.சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் நடக்கிறது.

    கொடியேற்ற விழாவையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரேவேஷ் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு ஆகிய 5 பல்லாக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடையும். நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் சொல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவு பெறுகிறது.

    கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் ஓதிய பிறகு 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் நடக்கும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நாளை (செவ்வாய்க் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தர்காவிற்கு வருபவர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தர்கா நிர்வாகியிடம் அறிவுறுத்தினார். அலங்கார வாசலில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாலையிட்டார்.

    அதனை தொடர்ந்து கந்தூரி ஊர்வலம் செல்ல உள்ள வாணக்கார தெரு, தெற்குதெரு, கடைத்தெரு ஆகிய இடங்களில் நடந்து சென்று பார்வையிட்டார். அலங்கார வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தர்கா கலிபா மஸ்தான் சாஹிப், தர்கா மேலாளர் ஜெகபர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    நாகூர் தர்காவில் இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரி விழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

    அப்போது, கூடியிருந்த இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 4-ந் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 13-ந்தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

    உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகள் மனிதனின் அத்தியாவசிய தேவைகள் ஆகும். இது தவிர பிறதேவைகளும் மனிதர்களுக்கு இருக்கவே செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவசியமான, முக்கியமான தேவைகள் இருக்கலாம்.

    இந்த தேவைகளை தனது உழைப்பின் மூலம் சிலர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்கள் உதவியுடன் தேவைகளை அடைந்துகொள்கிறார்கள்.

    ஆனால் சில தேவைகளை நிறைவேற்றும் வல்லமை மனித சக்தியையும் மீறியதாக இருப்பதுண்டு. அதுபோன்ற சூழ்நிலையில் மனிதன் தஞ்சம் அடையும் ஒரே புகலிடம் இறைவன் மட்டுமே.

    அந்த ஏக இறைவனிடம் கையேந்தி, கண்ணீர்விட்டு தனது வேண்டுதலை, தேவையை, பிரார்த்தனையை மனிதன் தெரிவிக்கின்றான். இறைவன் நாடினால் அந்த தேவை நிறைவேற்றியும் வைக்கப்படும்.

    ஈமான் எனப்படும் இறையச்சத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் இறைவனிடம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நபியே! உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், அதற்கு நீங்கள் கூறுங்கள்: ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். எவரும் என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். அதனால் அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (திருக்குர்ஆன் 2:186)

    “இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்”. (திருக்குர்ஆன் 40:60)

    இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ் மிக தெளிவாக நமக்கு கூறுவது என்னவென்றால், “அடியார்கள் என்னையே நம்பட்டும், என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும், அப்படி அவர்கள் இறையச்சத்துடன் செய்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதில் அளிக்கிறேன்”, என்று குறிப்பிடுகின்றான்.

    நபிகளார் மூலம் நமக்கு அருளப்பட்ட இந்த வசனத்தின் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நடந்து இறையச்சத்துடன் நமது தேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டும். அப்போது நமது பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதோடு, நாம் நேர்வழியையும் அடையலாம்.

    அதேநேரத்தில் நமது பிரார்த்தனைகள் ஏற்கப்படவேண்டும் என்றால் நமது இறைநம்பிக்கையும், நற்செயல்களும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

    ‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

    எனவே நமது இறை நம்பிக்கை பலம்மிக்கதாக, இறைவனின் திருப்பொருத்தத்தை ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறைகளும், சொல்லும், செயலும் அமைய வேண்டும்.

    திருக்குர்ஆனும், நபிகளாரும் காட்டிய வழியில் நமது அன்றாட வாழ்வும், செயல்களும் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனைகள் இறைவனின் கவனத்திற்கு செல்லும். அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்து விட்டு இறைவனிடம் கையேந்தினால் எந்த பலனும் ஏற்படாது.

    நற்குணங்கள் நிரம்பிய மனித வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாக கருதப்படுகிறது. நற்குணங்களும், நற்செயல்களும் கொண்டவர்களே மக்களால் விரும்பப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இறைவனும் நேசிக்கின்றான். நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை கிடைக்கின்றது, மறுமையிலும் இறைவனிடம் நன்மையே பெறுகின்றான்.

    இது குறித்த நபி மொழிகள் சொல்வது என்னவென்றால்:

    ‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (நூல்: அபூதாவூத்)

    ‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (நூல்: அஹ்மத்)

    ‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே’. (நூல்: திர்மதி)

    ‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (நூல்: இப்னு மாஜா)

    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

    எனவே, நற்குணங்கள் நிரம்பியதாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனின் வழியில் நடந்து நற்செயல்களை செய்வோம். இதன் மூலம் நமது நியாயமான தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை அடைவோம், ஆமின்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    நாகூர் தர்காவில் 4-ந் தேதி கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
    நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.

    இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கொடி மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் விழா நாட்களில் தர்காவிற்கு வருபவர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    விழா காலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தர்கா நிர்வாக மேலாளர் ஜெகபர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.
    எதற்கும் அடங்காத அரபு குதிரைகள் போன்று கடிவாளமில்லாமல் வாழ்ந்த மக்களை, தனது நற்குணங்களைக் கொண்டு செம்மைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

    நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை, நாணல் வகையைச் சார்ந்தவையாகும். நிலையானதாக இருக்காது என்பதால் ஒழுக்கம் சார்ந்தவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறது இஸ்லாம்.

    சொல்லும், செயலும் நேர்கோட்டில் பயணிப்பதுதான் ஆளுமையின் அடையாளமாகும். நபியவர்களின் ஆழ்மனதில் நங்கூரமிட்ட நற்குணங்களின் ஆணிவேரின் தாக்கம் அவர்களின் செயல், சொற்களில் தென்பட்டன.

    ‘இறைதூதுவை போதிக்க அனுப்பப்பட்டது போன்று,‌ நற்குணங்களைப் போதிக்க அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபியின் பிரகடனம் கூறுகிறது.

    “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்கு வதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்பது நபி (ஸல்) மொழியாகும்.

    ஓர் இறைக் கொள்கையை மக்களிடம் போதிக்க அனுப்பப்பட்டவர் நபி (ஸல்) அவர்கள். அதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தார்கள். நபியின் சொல், செயல் கண்டு பலர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். ஒரு சிலர் ஏற்க மறுத்தார்கள். ஏகத்துவத்தை வாழ் வியல் நெறியாக ஏற்க மறுக்கும் மக்களைச் சபிக்கும்படி கோரப்பட்ட‌த் தருணத்தில், ‘சபிக்கக் கூடிய பணி என் பணியல்ல’ என்று மறுமொழி தெரிவித்த சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

    “அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து, உங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருப்பவர்கள் மீது சாபமிடும்படி நபி ஸல் அவர்களிடம் வேண்டப்பட்டது. ‘நான் யாரையும் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, இரக்கம் காட்டுபவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என நபி (ஸல்) கூறினார்”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம்)

    நற்பண்புகளின் நாயகர் நபி (ஸல்) அவர்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தனது திருமறையில் நபியின் நற்குணத்திற்கு அல்லாஹ் சாட்சி பகருகின்றான். இதுவே நபியவர்களின் நற்குணங்களுக்கு முதல் ஆதாரமாக மாறுகிறது.

    “மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)

    தனக்கு ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளுதல், மன்னிப்பது, இவையெல்லாம் இயற்கையாக நபி (ஸல்) அவர்களுக்கு அமைந்த குணங்களில் ஒன்றாகும். தன்னுடைய சொந்த விஷயத்திற்காக யாரையும் பழிவாங்கும் பழக்கம் இல்லாதவராக வாழ்ந்தவர் நபி (ஸல்) அவர்கள்.

    “ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக யாரையும் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால், அல்லாஹ்வுக்காகப் பழிவாங்குவார்கள். மெதுவாகக் கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்குத் தேவையுடையோருக்குச் செலவு செய்தார்கள்”. (நூல்: ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால், அது மனிதச் சமூகத்திற்கு நலன் பயக்கும். ஒரு விஷயத்தை விட்டு தவிர்த்து கொண்டால் அதுவும் மனித சமூகத்திற்கு பயன்தரும். ஆக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் இரண்டும் மானுட அமைதிக்கு வழிவகுக்கும்.

    நபியின் வாழ்வு எப்படி அமைந்தது என்று கேட்கப்பட்டபோது. `அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது' என்ற பதில் கிடைத்தது. ஆம், திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்டவற்றை நாம் எடுத்துக் கொண்டு நற்குணங்களின் ஆளுமையின் கீழ் நம்மை ஈபடுத்திக் கொண்டால் நம் வாழ்வு செம்மையாகும்.

    ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.

    “அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ (ரலி), நூல்: புகாரி)
    இஸ்லாமிய மார்க்கம் என்பதே பிறர் நலம் சார்ந்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள், வாழ்வியல் தத்துவங்கள் யாவும் பிறர் நலம் குறித்து அதிகம் பேசுவதை காண்கிறோம்.

    சுயநலம் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. பிறர்நலம் என்பது இஸ்லாத்திற்கு உட்பட்டது. சுயநலம் என்பது நயவஞ்சகத்தன்மை. பொதுநலம், பிறர்நலம் என்பது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்.

    “அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ (ரலி), நூல்: புகாரி)

    “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஜகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி எடுத்தேன்’ என ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்”. (நூல்: புகாரி)

    ஜரீர் பின் அப்துல்லாஹ் கூறுவதாவது: “நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுக்க வந்திருக்கிறேன்’ என்றேன். அப்போது அவர்கள், ‘முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்’ என எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி கொடுத்தேன்”. (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை, இறைநம்பிக்கை, இறைவணக்கங்களாக அமைந்துள்ள தொழுகை, ஜகாத் போன்றவற்றை செயல்படுத்துவதின் அடிப்படையில் மட்டுமே நிபந்தனை விதித்து, இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இதையும் தாண்டி ‘ஒவ்வொருவருக்கும் நலம் நாடவேண்டும்’ என்பதையும் சேர்த்து, நிபந்தனை விதித்து இஸ்லாத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

    பிறருக்கு நலம் நாடுவது என்றால் என்ன?

    பிறர் நலம் நாடுவது என்றால் தமக்கு விரும்புவதையே பிறருக்கு விரும்புவதும், பிறர் நலனை கெடுக்காமலிருப்பதும், அவருக்கு அனைத்து நலன்களையும், பலன்களையும் சேர்த்து வைப்பதும் ஆகும். அவருக்கு தம்மால் வரும் கெடுதிகளையும், பிறரால் ஏற்படும் கெடுதிகளையும் விட்டு தடுப்பது ஆகும். அவரின் அறியாமை இருளை நீக்கி, கல்வி ஒளியை சேர்ப்பதும் ஆகும். இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார். இவ்வாறு நடப்பதே உண்மை இஸ்லாம்.

    “பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளில்இருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    “இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

    “உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    “ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘ஆமீன் (இறைவா! ஏற்றுக் கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’ என்று கூறுகிறார் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ஒருவர் தமது நலனுக்காக மட்டும் பிரார்த்திக்கும் போது, அந்த பிரார்த்தனை ஏற்பதற்காக யாரும் ‘ஆமீன்’ என்று சொல்வது கிடையாது. அதே வேளையில் பிறர் நலனுக்காக சேர்த்து பிரார்த்திக்கும் போது, அந்தப் பிரார்த்தனைக்கு வானவர் ‘ஆமீன்’ கூறி, அது இறைவனிடம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக உதவியும் புரிகிறார். அவருக்கு கிடைப்பதெல்லாம் உனக்கும் கிடைக்கட்டும் என்றும் ஆசைப்படுகிறார். பிறர் நலனில் அக்கறை கொள்ளும்போது நமது நலனில் வானவரே அக்கறை கொள்கிறார். இறைவனும் அக்கறை கொண்டு நமது நலன் சிறக்க, நமது வாழ்வு வளம்பெற உதவியும், கருணையும் புரிகின்றான்.

    பிறர் நலன் நாடு! உன் நலன் சிறக்கும்!

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ``என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).
    ஆசைகளும், பேராசைகளும் மனிதனை அழிக்கும் உயிர்க் கொல்லியாகும். இதுமட்டுமின்றி பாவங்களின் முதல் காரணகர்த்தாவும் இவையே. அதன் நிழல்களைக் கூட அணுகத் தடை செய்கிறது இஸ்லாம். இந்த வாழ்க்கை என்பது பயணம்தான், யாரும் இவ்வுலகில் தங்கி வாழ்பவர் அல்ல. வழிப்போக்கன் போல், சில காலம் தங்கி மறுபடியும் மறுமை நோக்கி பயணிப்பதுதான் நம் வாழ்வின் நோக்கமாகும்.

    இம்மை வாழ்வை விட மறுமை வாழ்வு நிலையானது என்கிறது இஸ்லாம். மறுமை வாழ்விற்கான முன்னோட்டம்தான் இவ்வாழ்க்கை. இது, நிரந்தரமற் றது என்பதில் உறுதியாக இருக்கிறது இஸ்லாம். இதனை குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

    ``என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).

    உலகில் நீ (தாய் நாடு அல்லது சொந்த ஊர் அல்லாத ஓரிடத்தில் வாழும்) ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழ்வாயாக!’ மண்ணறைவாசிகளை போல் உன்னை நினைத்துக்கொள். உமரின் மகனே! நீ காலைப் பொழுதை அடைந்தால் மாலையை எதிர்பார்க்காதே. நீ மாலையை அடைந்தால் காலையை எதிர்பார்க்காதே. நோயின் பாதிப்புகளுக்கு முன்னால் ஆரோக்கியத்தையும், மரணத்தைச் சந்திப்பதற்காக வாழ்வையும் பயன்படுத்திக் கொள். ஓ அப்துல்லாஹ், நாளை உன் நிலை என்ன என்பது நீ அறியமாட்டாய்’’ என்றார்கள் நபி (ஸல்). (நூல்: திர்மிதி)

    உலகத்தின் மையக்கரு என்ன என்பதை இந்த நபிமொழி தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. இதனை புரிந்து கொண்டோர்களுக்கு அமைதியான நதியில் மிதக்கும் இலை போன்று வாழ்க்கை அமையும். இந்த உலகத்தின் சாராம்சத்தை அறிய முற்படாமல் மன இச்சைக்கு அடிமையானால், அலையில் சிக்கிய படகு போல் நிம்மதியின் கயிறு அறுந்து நிறம் மாறிப்போகும்.

    “அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்”. (திருக்குர்ஆன்: 30:7.)

    இந்த உலகம் வெறும் அலங்காரம் என்பது, வாழும் காலத்தில் நமக்கு புலப்படாது.‌ மரணிக்கும் நேரத்தில் முழுமையாகப் புலப்படும். அப்போது அது பயன் தராது.

    அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை’’. (திருக்குர்ஆன் 57:20)

    ஜனனம், மரணம் இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ள பயணமே வாழ்க்கை. தீமையான காரியங்களை விட்டு நம் மனதைத் தூரம் போகச் செய்யவேண்டும். இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அறிவதில், இம்மை மற்றும் மறுமையின் சந்தோஷங்கள் தொடர் கின்றன.

    ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    ×