search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நாகூரை அடுத்த தெத்தியில் உள்ள செய்யது முகமது கவுது சாந்தா ஹூசைன் சாஹிப், செய்யதத்னா செய்யது காதர் அழகு நாச்சியார் தர்காவில் சந்தனம் பூகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகூரை அடுத்த தெத்தியில் செய்யது முகமது கவுது சாந்தா ஹூசைன் சாஹிப், செய்யதத்னா செய்யது காதர் அழகு நாச்சியார் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஆண்டவர்கள் சமாதிக்கு சந்தனம் பூகம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டவர்கள் சமாதிக்கு தர்கா டிரஸ்டி ஜான் செய்யது தாஹா சாஹிப் சந்தனம் பூசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
    தக்கலையில் மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
    தக்கலையில் மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ரஜப் பிறை ஒன்று முதல் 18 வரை நடக்கும்.

    இந்த ஆண்டு இவ்விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்தள் மவுலிது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மார்க்க பேருரை நடக்கும். இந்த மார்க்க பேருரையில் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பீரப்பா பற்றிய செய்திகளை தொகுத்து பல்வேறு சிந்தனைகளில் வழங்க உள்ளனர்.

    7-ந்தேதி தொடங்கும் மார்க்க பேருரை ஒப்பில்லா மேலோன் என்ற தலைப்பிலும், 8-ந்தேதி ஆண்பிள்ளை சிங்கம் முகமதுவாம் என பல்வேறு தலைப்புகளில் பேருரைகள் நடக்கிறது. 14-ந்தேதி பீர்முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி நூல் புதிய பதிப்பு வெளியீடு நிகழ்ச்சி நடைக்கிறது.

    நிகழ்ச்சிக்கு அபீமு தலைவர் அப்துல் ஜாபர் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிங்கப்பூர் ஜாமிஆ அற நிறுவன துணைத்தலைவர் முகமது சலீம் வெளியிட தக்கலை ஷபீருத்தீன், முகமது இர்பானுல்லா பெற்றுக்கொள்கின்றனர்.

    தமிழ் பக்தி இலக்கிய மரபில் பீர் முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி என்ற சிந்தனையில் முகமது அலி பேசுகிறார். 15-ந்தேதி பீர்முகமது அப்பா பாடி அருளிய ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். 16-ந்தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதலும், 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நிகழ்ச்சி நடக்கும்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் நெல்லை, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ஜாபர், செயலாளர் முஸ்தபா. துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபிக் மற்றும் உறுப்பினர்கள், விழா குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.
    அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

    காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஆகிய ஐந்து அம்சங்களால் உருவாக்கப்பட்டது தான் உலகமும், உலக உயிரினங்களும். இந்த ஐந்து நிலைகளில் ஒன்றை இழந்தாலும் உயிர் வாழ முடியாது; உலகமும் இயங்காது.

    நிலம் என்பது வெறும் மண்ணை மட்டுமே குறிக்காது. மண்ணில் விளையும் அனைத்து வகையான உணவு வகைகளையும் உள்ளடக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் உணவின்றி உயிர் வாழமுடியாது. மனிதன் உயிர் வாழ உணவு தேவை.

    ஒருவருக்கு போதுமான அளவை விட அதிகப்படியான உணவு பண்டங்கள் யாவுமே அடுத்தவரின் உணவே, அவரின் உடமையே, அவரின் உரிமையே. அடுத்தவரின் உணவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாம், தமக்கு போக மீதமுள்ளதை தானமாக வழங்கிட வேண்டும். வீண் விரயம் செய்யக்கூடாது.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை வலியுறுத்தி இஸ்லாம் அதிகமாக பேசுகிறது. இஸ்லாத்தில் சிறந்த செயல் பசித்தவருக்கு உணவளிப்பது. செயல்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்த விருப்பமான செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. சொர்க்கத்தின் வாசலை திறந்து வைக்கும் செயல், பசித்தவனுக்கு உணவளிப்பது. மக்களில் சிறந்தவர் பசித்தவனின் பசியை போக்குபவர் ஆவார். பசித்தவனின் பசியை போக்கும் பண்பு நல்லோர்களின் பண்பு. பசியை போக்கும் நற்பண்பு வலப்புறத்தாராகிய சொர்க்கவாசிகளின் இயற்கையான பண்பு.

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமியப் பண்புகளில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘பசித்தவருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்துக் கூறுவதும் ஆகும்’ என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ‘செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது, ஒருவர் மகிழ்ச்சியை தமது சகோதர முஸ்லிமுக்கு சேர்த்து வைப்பதும், அவரை விட்டு சிரமங்களை அகற்றுவதும், அவரின் பசியை போக்குவதும், அவரின் கடனை நிறைவேற்றுவதும் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)

    “ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, என்னை சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும் ஒரு செயலை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என வேண்டினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘நீர் ஓர் அடிமையை விடுதலை செய்வீராக, அதற்கு சக்தி பெறாத பட்சத்தில் பசித்தவருக்கு உணவளிப்பீராக, தாகித்தவனுக்கு நீர் புகட்டுவாயாக’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘ஒரு பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்களில் சிறந்தவர் பசித்தவருக்கு உணவு அளிப்பவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘நிச்சயமாக நல்லோர்கள் இறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக வேண்டியே. உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நீங்கள் நன்றி செலுத்த வேண்டியோ நாங்கள் நாடவில்லை’ என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 76: 8,9)

    ‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் இவைகளே கணவாய் ஆகும். அவர்களே வலப்புறத்தார்’. (திருக்குர்ஆன் 90:11-18)

    ‘தம் அண்டைவீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுபவன் உண்மை இறைவிசுவாசியாக ஆகமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஹாகிம்)

    பசித்திருக்கும் அண்டை வீட்டாரின் பசியையும் போக்கி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நாடோடிகளாக ரோட்டில் சுற்றித்திரியும், வீதிகளை வீடுகளாக நினைத்து தெருவீதிகளிலும், கடை வீதிகளிலும், நடைபாதைகளிலும், கடைகோடியிலும் இருப்பிடம் அமைத்து அல்லல்படும் அப்பாவிகளின் பசியையும் போக்க வேண்டும். யாசிப்பவருக்கும், யாசிக்காமல் சுயமரியாதையாக வாழும் கஷ்டப்படுவோருக்கும் உணவளித்து, அவர்களின் பசியை போக்கிட வேண்டும். பசித்தவனின் பசியை போக்கி பசியில்லாத, பட்டினிச்சாவு இல்லாத உலகை கட்டமைப்போம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    நாகூர் மெயின்ரோட்டில் உள்ள சின்ன தைக்காலில் செய்யது பீர் பாலக் ஷா ஒலியுல்லா தர்கா நடந்தது. இதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
    நாகூர் மெயின்ரோட்டில் சின்ன தைக்காலில் செய்யது பீர் பாலக் ஷா ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம்பூசும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ஆண்டவர் சமாதிக்கு டிரஸ்டி செய்யது அகமது சந்தனம் பூசினார். இதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    கந்தூரி விழா நிறைவு நாளான இன்று (வெள்ளிகிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    இன்றைய உலகில் பலர் தேடி அலையும் விஷயம் மனநிம்மதி. இந்த நிம்மதிக்காக சிலர் பொருளாதாரத்திற்குப் பின்னால் ஓடுகிறார்கள். சிலர் அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டால் நிம்மதி இருக்கும் என்று அங்கு செல்கின்றார்கள். இன்னும் சிலரோ போதைக்கு அடிமையா கிறார்கள்.

    இப்படி மனிதர்கள் எடுக்கும் முயற்சியில் அவர்களுக்கு மன நிம்மதி கிடைத்து விட்டதா என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

    இதற்கான தீர்வை இறைவன் கூறுகின்றான்: “ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறை நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய வாழ்வு வாழச் செய்வோம்”. (திருக்குர்ஆன் 16:97)

    தூய வாழ்வு என்றால் என்ன? நிம்மதியான சலனங்களுக்கு உள்ளாகாத வாழ்வுதான் அது. பிரச்சினைகள் வரும், சிக்கல்கள் எழும், ஆயினும் மனதில் நிம்மதியை மட்டும் ஒருபோதும் இழக்காத வாழ்வுதான் தூய வாழ்வு.

    நிம்மதி இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணம் எது?

    இழப்புகள்தான். இழப்புகளை சந்திக்கும்போது நிம்மதியையும் இழக்கிறான் மனிதன். அது எந்த இழப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொருளாதார இழப்புகள், பிரியமானவர்களுடைய இழப்புகள், உடல் ஆரோக்கியத்தின் இழப்பு. இப்படி இழப்புகளை சந்திக்கும்போது மனிதன் நிம்மதியையும் சேர்த்தே இழக்கின்றான்.

    இதுபோன்ற வேளைகளில் நிம்மதியை இழக்காமல் இருக்க இஸ்லாம் கூறும் வழிமுறை என்ன தெரியுமா? இறைநம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிப் பிடிப்பதுதான். யாரிடம் உண்மையான, உறுதியான இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர் நிம்மதியை வெகு சீக்கிரம் இழப்பதில்லை.

    இறைநம்பிக்கையின் உட்கருத்து என்ன தெரியுமா? எனக்கு பொருளாதாரத்தை தந்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். பிரியமானவர்களை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். ஆரோக்கியத்தை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். என் வாழ்வில் ஏற்படும் அனைத்து இழப்புகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்திருக்கின்றது என்று யார் உறுதியுடன் நம்புகின்றாரோ அவருடைய உள்ளம் நிம்மதியடைகின்றது.

    அநீதி இழைக்கப்படும் போது மனிதன் கவலைக்கு உள்ளாகின்றான். மக்கள் நம்மை தவறாக விமர்சிக்கும்போது, நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்போதும், மறுமையை நம்பக்கூடிய ஓர் இறைநம்பிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்றால்; “இந்த உலகில் எத்தனை வருடம் வாழ்வோம்? சராசரியாக 60 அல்லது 70 வருடம் தான். மண்ணறை வாழ்க்கை முடிந்த பிறகு மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்புவான். எழுப்பிய பிறகு, ‘நான் நல்லவனா கெட்டவனா’ என்று காண்பிப்பான். அங்கு எனக்கு நீதியை வழங்குவான்” என்று நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை நிம்மதியைப் பெற்றுத்தரும்.

    இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:

    ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்பும் பெறட்டும். பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்படும் மறுமை நாள் வருவதற்கு முன்னால் மன்னிப்பு பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில் அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதி இழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் அவர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். (நூல்: புகாரி)

    இந்த நபிமொழியை ஒருவர் நன்றாக விளங்கிவிட்டால் மனம் கண்டிப்பாக நிம்மதி அடையும். நமக்கு அநீதி இழைக்கக்கூடிய மக்களைப் பார்த்து ஒருவகையில் மகிழ்ச்சி அடையவேண்டும். காரணம், நமக்காக அவரும் நன்மை செய்கின்றார். இந்த எண்ணத்தை வளர்த்தால் நிம்மதி வந்து சேரும்.

    நல்லசிந்தனை நிம்மதியைப் பெற்றுத்தருவது போன்றே நற்செயல்களும் நிம்மதியைப் பெற்றுத் தருகிறது. நற்செயல்களில் மிகவும் மேலானது இறை நினைவுதான். இறைவன் கூறுகின்றான்:

    “அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன”. (திருக்குர்ஆன் 13:28)

    வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    முஹம்மத் முபாரக், திருச்சி.
    பொங்கல் பண்டிகையையொட்டி மூடப்பட்ட நாகூர் தர்கா 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி பேராலயத்தில் வழிபட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதன்படி நாகூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவும் 5 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபட அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் நாகூர் சில்லடி கடற்கரை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.
    இறைவன் இவ்வுலகைப் படைத்து அவற்றில் உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தான். ஏனைய படைப்புகளுக்கு சாதாரண அறிவைக்கொடுத்த இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்தான். காரணம், அனைத்தையும் மனிதன் பகுத்துணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. ஆயினும் ஏனைய உயிரினங்கள் எல்லாம் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவின் அடிப்படையில் இறைவனுக்கு கீழ்படிகின்றன. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் ஏனோ இறைவனுக்குக் கீழ்ப்படியத் தயங்குகின்றான்.

    காரணம் என்ன?

    உலக ஆசைகள்தான் மனிதனை இறைவனுக்குக் கீழ்படிய அனுமதிப்பதில்லை. உலகமே நிரந்தரம் என்றும், இனிஒருபோதும் இறைவனிடம் திரும்ப மாட்டோம் என்று கருதுவதும், தன்னைத் தானே ஏமாற்றுவதாகும். காரணம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும், யாரும் இங்கே நிரந்தரமாக வாழ முடியாது என்று. பிறந்தவர் எவரேனும் இறக்காமல் இருந்திருக்கின்றார்களா? பின் எதற்காக இந்த உலகின் மீதும் உலகில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் வெறிகொண்டவர் போல் மோகம் கொள்ள வேண்டும்?

    எப்போது மனித உள்ளத்தில் உலக மோகம் வருகின்றதோ, அப்பொழுது அவன் தன்னையே மறந்து விடுகிறான். அந்த ஆசை அவனை மிருகத்தன்மை கொண்டவனாக மாற்றிவிடுகிறது.

    பேரறிஞர் ரூமி (ரஹ்) ஓர் உதாரணத்தின் மூலம் இதனை இவ்வாறு விளக்குகிறார்:

    மனிதன் உலகில் வாழ்வதற்கு எண்ணற்ற விஷயங்கள் தேவைப்படுகின்றன. உலகம் கடல் நீருக்கு ஒப்பானது. அந்த நீரில் ஓடும் கப்பல் போன்றதுதான் மனித வாழ்வு. நீரின்றி கப்பல் எவ்வாறு செயல்படாதோ, அவ்வாறே பொருட்களின்றி உலகில் வாழ முடியாது. கப்பலுக்கு வெளியே நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வரைதான் அந்த நீரால் கப்பலுக்குப் பயன். அதேவேளை அந்த நீர் கப்பலுக்குள் வந்துவிட்டால் முழுக் கப்பலும் மூழ்கிவிடும். அவ்வாறுதான் உலகமும். நமது பயன்பாட்டையும், தேவையையும் தாண்டி பேராசை உள்ளங்களுள் வந்துவிட்டால், அந்தக் கப்பலுக்கு ஏற்படும் நிலைதான் மனிதனுக்கும் ஏற்படும். பின்னர் பாவங்களில் மூழ்கி வாழ்க்கையே நிம்மதியற்றதாகி, இவ்வுலகையும் மறுமையையும் ஒருசேர இழக்கும் நிலை ஏற்படும்.

    செல்வத்தைத் தேடும் வேகத்தில் கட்டாயக் கடமைகளைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை. தொழுகையையும், நோன்பையும் தவற விடுகின்றோம். குர்ஆனை தலைகுனிந்து ஓதி இருக்கின்றோமா? நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வழிகாட்டி நூல் அல்லவா அது. ஆனால் செல்போனை, எவ்வளவு நேரமாக இருந்தாலும் தலைகுனிந்து பார்க்கின்றோம்!

    அல்லாஹ் நம்மைக் கவனிக்கின்றான், கண்காணிக்கின்றான், பார்க்கின்றான் என்ற அச்சம் இருந்தால் உலக மோகத்தில் மூழ்கிட மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடமாட்டோம்.

    ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஒரு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கு ஓர் ஆட்டுக்குட்டி காது அறுபட்டு இறந்த நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த செத்த ஆட்டுக் குட்டியை யாரேனும் ஒரு திர்ஹத்திற்கு வாங்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள்.

    அதற்கு தோழர்கள் இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இருந்தாலும் இதன் காது அறுபட்டிருப்பதால் இதனை யாரும் வாங்க விரும்பமாட்டோம். ஆயினும் இது இறந்து கிடக்கிறது. இதை எவ்வாறு நாங்கள் வாங்க விரும்புவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், இந்த செத்த ஆட்டுக்குட்டி (உங்களிடத்தில்) எவ்வாறு மதிப்பற்றதோ, அதைவிடவும் அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் மதிப்பற்றது என்று கூறினார்கள்.

    உலகில் வாழும் நாம், வாழ்வதற்காகவும் தேவைக்காகவும் மட்டுமே உலக ஆசைகொள்ள வேண்டும். அதுவே வெறியாக மாறக்கூடாது. தேவைக்கும் அவசியத்திற்கும் உலக ஆசை கொள்வது வேறு. உலகே கதியென்று கிடப்பது வேறு. வாழும் காலம்வரை ஆசைக்கு அணைபோட்டு தடுத்துக்கொள்வோம். காரணம், மறுமை வெற்றிக்கு உலக மோகம் ஒருபோதும் தடையாக மாறிவிடக் கூடாது.

    உலகம் நிலையானது அல்ல. மறுமை மட்டுமே நிலையானது. மறுமை வெற்றிதான் ஓர் இறைநம்பிக்கையாளனின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.

    அம்ஜத் கான், திருச்சி.
    தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 45 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 13-ந் தேதி நடந்தது.

    இதை தொடர்ந்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 45 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், முருகவேல், அப்துல் கபூர், கென்னடி முன்னிலையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நடந்தது. இரவு 7 மணி அளவில் நாகையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு 9 மணி அளவில் நாகூர் வந்தடைந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால் நாகை மற்றும் நாகூரில் உள்ள தெருக்களுக்கு செல்லாமல் சந்தனக்கூடு ஊர்வலம் நேரடியாக நாகூர் அலங்கார வாசலை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் என்றாலே நாகை மற்றும் நாகூர் நகர பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாகை, நாகூர் பகுதிகள் களையிழந்து காணப்பட்டன. நாகூர் தர்கா பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த ஊர்வலத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார். தர்கா நிர்வாகம் சார்பில் 45 பேர் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சந்தனக்கூடு ஊர்வலத்தின்போது 8 மின் அலங்கார ஊர்திகள் வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்தனக்கூடு மட்டும் நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று இரவு 7 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நாகை- நாகூர் சாலை வழியாக நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது.
    நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற நாளை (13-ந்தேதி) இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.

    அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)
    தனக்கும், தன் அருகில் வாழும் மனிதர்களுக்கும் பேச்சுக்களாலும், செயல்களாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே சமூக ஒழுக்கம். வாழும் காலமெல்லாம் இவை நம்முடன் பயணிப்பது, நம்மை மேன்மக்களாக சமூகத்தில் உயர்த்தச் செய்யும்‌. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடன் அன்போடு பழக இவ்வாறு வழி காட்டுகிறது இஸ்லாம்:

    “மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

    “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    வீதிகளில் அமரும் போதும், வீதிகளைக் கடக்கும் போதும் சில ஒழுக்கங்களை இஸ்லாம் போதிக்கின்றது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல், சாலைகளை கடப்பவர்களுக்கு உதவுதல், அவர்களுக்கு அரணாக மாறுதல் தர்மம் என்கிறது இஸ்லாம். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

    ‘நீங்கள் பாதைகளில் அமர்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். ‘நாங்கள் அமர்ந்து பேசுவதற்கு வேறு இடம் இல்லையே’ என்று நபித் தோழர்கள் வினா எழுப்பினர். ‘அப்படியென்றால் பாதைக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்’ என்று நபி (ஸல்) கூற, ‘பாதைக்கான கடமைகள் என்றால் என்ன?’ மறுபடியும் நபித் தோழர்கள் கேட்க, ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், தொந்தரவு செய்யாமல் இருங்கள், முகமன் கூறுங்கள், நல்லவற்றை ஏவி தீமைகளைத் தடுங்கள்’ என்று பாதைகளுக்கான கடமைகளைப் பட்டியலிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    நம்மையும், நம்மைச் சுற்றியும் வசிக்கும் மாற்று மத நண்பர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும். இதை இறைவனே தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)

    ‘ஒருவர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார், (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    தும்மும் போது கைக்குட்டையைக் கொண்டு மூடிக்கொள்ளுதல், கொட்டாவி விடும் நேரத்தில் கைகளால் வாயை மூடிக் கொள்ளுதல், எச்சில் துப்பினால் மண் கொண்டு மூடுதல், சபை நாகரீகம் கருதி பேசுதல், இவை அனைத்தும் சமூக ஒழுக்கத்தின் முக்கிய தூண்களாகும். பேச்சுகளையும், செயல்களையும் மனித சமூகத்திற்கு எதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது சமூக ஒழுக்கமாகும். இதைப் பேணுதலில் உலக அமைதி பிறக்கிறது. சமூக ஒழுக்கத்தை திருக்குர்ஆனும், நபி மொழியும் பல இடங்களில் இவ்வாறு பதிவு செய்கின்றன.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    ×