search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூமியே மனிதனின் வாழ்விடம்
    X

    பூமியே மனிதனின் வாழ்விடம்

    பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.
    விண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.

    ஆதி நபி ஆதம் (அலை) அவருடைய மனைவி ஹவ்வா (அலை) ஆகியோர் ஷைத்தானால் வழி கெடுக்கப்பட்டு தவறிழைத்தபோது, ‘‘(இச்சோலையில் இருந்து) நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களுக்குப் பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சில காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம் என்று நாம் கூறினோம்’’ (திருக்குர்ஆன்2:34) என்று இறைவன் கூறுகின்றான்.

    மேலும், ‘‘(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்’’ (திருக்குர்ஆன்7:10) என்பது இறை வாக்கு.

    இதன் மூலம் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    சூரிய குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், துணைக் கோளான சந்திரனிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று, நீர் ஆகியவை இருக்கிறதோ அங்கேதான் உயிர்கள் வாழமுடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

    புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை. மற்ற கோளங்களை விட இங்கு வெப்பம் அதிகம். இந்தக் கோளின் அதிக பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் ஆகும். பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தக் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது.

    வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தைப் போல 11 மடங்கு அதிகம் ஆகும். மேலும் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு எனப்படும் ஆக்சிஜனும் கிடையாது. எனவே இதிலும் மனிதன் வாழ முடியாது.

    சூரியனில் இருந்து 23 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இந்தக் கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் ‘செவ்வாய்’ என்ற பெயர் ஏற்பட்டது.

    பூமியில் உள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு காற்றுதான் இந்தக் கிரகத்தில் உள்ளது. அந்தக் காற்றில்கூட ஒரு சதவீத அளவே ஆக்சிஜன் இருக்கிறது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.

    வியாழன் கோளிலும் மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போன்று பாறைக் கோளாக இல்லாமல் வாயு கோளாக இருக்கிறது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. இங்கு சென்றால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகரிக்கும். நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.

    சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது. இங்கே வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது.

    யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

    பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது. எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.

    ‘‘அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து மேகத்தில் இருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும், உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவற்றை யெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்’’ (திருக்குர்ஆன்–2:22) என்று இறைவன் கூறுகின்றான்.

    பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால், உடல் தாங்கிக் கொள்கிற அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமாகும். சூரிய ஒளிக் கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவை அடங்கி உள்ளன. சூரியனிடம் இருந்து பெறப்படுகிற வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றில் இருந்து வெளிப்படுகிற புற ஊதாக் கதிர்களால் மனிதன் பாதிக்கப்படுவான். பிற உயிரினங்களும் பாதிக்கப்படும்.

    இந்தக் கதிர்களை வடிகட்டுவதற்காகவே ‘ஓசோன்’ என்னும் படலம் பூமியைச் சுற்றி வளையம் போல அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வளி மண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு பூமியே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற இடம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    மேலும் பூமி மட்டும்தான் சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. இப்படிச் சுற்றுவதால்தான் கோடை காலம், குளிர் காலம், வசந்த காலம், இலையுதிர் காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

    மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்குச் சாதகமான, வசதியான வாழ்விடம், இறைவன் கூறுவது போல ‘பூமி’ மட்டுமே!

    - பாத்திமா மைந்தன்
    Next Story
    ×