search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனித மனம் கவர்ந்த மாநபி
    X

    மனித மனம் கவர்ந்த மாநபி

    மாநபி வழங்கிய நற்சான்றின்படி, உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்த முகைரிக் என்றும் சிறந்தவராகவே உலக வரலாற்றில் கருதப்படுகிறார்.
    மக்கத்து நிராகரிப்பாளர்களுக்கு பத்ரு போரில் ஏற்பட்ட தோல்வி என்பது அவர்களை நிலைகுலையச் செய்து விட்டது. பல முக்கிய தலைவர்கள் அதில் இறந்து போனதும் அவர்களின் பழிவாங்கும் எண்ணத்தை இன்னும் அதிகமாக்கியது.

    எனவே நிராகரிப்பளர்களான சப்வான், உமைர் ஆகிய இருவரும் நபிகளாரை எப்படி பழி தீர்ப்பது என்பது குறித்து மக்கா நகரில் திட்டம் தீட்டினார்கள். உமைரின் மகன் பத்ரு யுத்தத்தில் யுத்த கைதியாக மதீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்தார். இது உமைரின் மனதை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.

    உமைர் சப்வானிடம் கூறினார், ‘நான் பெரிதும் கடன் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும், நான் இல்லையென்றால் எனது குடும்பம் கவனிப்பார் அற்றதாக போய்விடுமோ என்ற அச்சத்தாலும் நான் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றேன். இந்த இரண்டு விஷயங்களுக்கும் யாராவது பொறுப்பேற்றுக் கொண்டால் நான் பொதுநலன் கருதி என்னுயிரை தியாகம் செய்து முஹம்மதுவை கொலை செய்யத் தயாராக இருக்கின்றேன்’ என்றார்.

    ‘உமைரே! நீர் கவலைப்படவேண்டாம். நீர் சொன்ன அவ்விரண்டு விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று சப்வான் உறுதி கூறினார்.

    இத்திட்டம் நடக்கும் வரை அதனை ரகசியமாக வைத்துக் கொள்வது எனவும் இருவரும் முடிவு செய்து கொண்டனர்.

    பின்னர் உமைர் விஷம் தோய்ந்த கூர்மையான வாளை எடுத்துக் கொண்டு தனது மகனை விடுவிக்கின்ற சாக்கில் மதீனா புறப்பட்டார்.

    உமைர் மதீனாவை அடைந்தபோது நபி களார் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். உமைர் வாளுடன் நபியை நோக்கி வருவதைக் கண்ட உமர் (ரலி) அவரை உள்ளே வரவிடாமல் தடுத்தார்கள். எனினும் நபிகளார் உமைரை தன்னிடம் வரவிடுமாறு கூறினார்கள்.

    உமைர் அருகில் வந்ததும் அவரது வருகைக் குறித்த காரணம் அவரிடம் வினவப்பட்டது. தனது மகனின் விடுதலைக்காகவே வந்ததாக வஞ்சகமாக கூறினார்.

    ‘அப்படியானால் ஏன் வாள் எடுத்து வந்துள்ளர்?’ என்றார் நபிகளார்.

    ‘எங்களது வாள்களை எல்லாம் இறைவன் சபிக்கட்டும். அதனால் எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே’ என்றார் உமைர்.

    அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சப்வானும் உமைரும் மக்காவில் பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு வரி விடாமல் கூறியதும் திகைத்து போனார் உமைர்.

    ‘உமைரே! நீர் என்னைக் கொல்வதற்காகவே உமது கடன் சுமைகளையும், குடும்பத்தினரையும் சப்வானிடம் பொறுப்பு சாட்டிவிட்டு தானே வந்திருக்கிறீர்?’ என்று நபிகளார் கூறினார்கள்.

    உடனே ‘முஹம்மதே! இச்செய்தியை உமக்கு கூறியது யார்?’ என்றார் உமைர்.

    ‘இறைவன் மீது ஆணையாக நாங்கள் இருவரும் சதி திட்டம் தீட்டி பேசும்போது எங்கள் இருவரைத்தவிர அங்கு மூன்றாம் நபர் வேறு யாரும் இல்லையே! இது சாதாரண மனிதருக்கு சாத்தியமில்லையே?’ என்று உணர்ந்தார் உமைர்.

    இதற்கு அண்ணலார் அமைதியாக பதில் அளித்தார். ‘எனக்கு ஜிப்ரியல் மூலம் இறைவன் அறிவித்துக் கொடுத்தான்’ என்றார்கள்.

    இந்த அருள்மிகு வார்த்தைகள் உமைரின் உள்ளத்தை மீண்டும் உலுக்கியது.

    ‘வானலோகத்தில் இருந்து உமக்கு இறைச்செய்தி வருவதாக நீர் கூறியபோது, நாங்கள் எமது அறியாமையின் காரணத்தால் உம்மை பொய்யர் என்று கூறினோம். ஆனால் இப்போது எங்கள் இருவர் விஷயத்தில் நாங்கள் யாருக்குமே வெளிபடுத்தாத ரகசியத்தை இறைவன் உமக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளான். முஹம்மதே! நீங்கள் உண்மை உரைத்தீர்கள்’ என்று உமைர் கூறினார்.

    ‘இஸ்லாத்தில் நுழைய எனக்கு வழிகாட்டிய அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மத் அவனுடைய தூதராய் இருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்று உளமார மொழிந்தார்.

    அண்ணலாரின் அருள்மொழியானது கொலை செய்ய வந்த உமைரின் உள்ளத்தை திசை மாறச் செய்ததோடு ஈமானை (இறை விசுவாசத்தை) ஏற்றுக்கொள்ள வைத்தது.

    அண்ணலாரின் அன்பு உள்ளம், உயிருக்கு உலை வைக்க வந்த உமைரின் மனதை இறைவனின் அருளால் தன்வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டது.

    இதுபோன்று மனித மனம்கவர்ந்த மாநபியின் மற்றொரு நிகழ்வு இது:-

    உஹத் போரின் போது மரணித்தவர்கள் மத்தியில் இனம் தெரியாத ஒருவரது உடலும் இருந்தது. அவரைப்பற்றி விசாரித்த போது, அவர் தலாபா கோத்திரத்தை சார்ந்த கல்வியறிவு மிக்க யூத ஆசிரியர் என்றும் அவரது பெயர் முகைரிக் என்றும் அறியப்பட்டது.

    பின்னர் அவரைப்பற்றி விசாரித்த போது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

    முகைரிக், உஹத் யுத்த தினத்தின் அதிகாலையில் தமது மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இவ்வாறு ஒரு பொது அறிவிப்பு செய்தார்.

    “நபிகளாருடன் யூதர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி உஹத் யுத்தத்தில் நாம் அனைவரும் கலந்து கொண்டு போர் புரிந்திருக்க வேண்டும். ஆனால் ‘ஸப்பத்’ என்று விரதம் பூணும் ஓய்வு தினத்தை காரணமாக காட்டி போரில் கலந்து கொள்ளாமல் உடன்படிக்கைக்கு மாற்றமாக நடந்துகொண்டோம்”.

    “இது உண்மையாகவே ஸப்பத் விரதம் மேற்கொள்பவர்களின் நடவடிக்கையாக இருக்காது. நீங்கள் வராவிட்டாலும், நான் ஒருவனாவது உடன்படிக்கையை காப்பாற்ற வேண்டி தனியாக சென்று உஹது போரில் கலந்து கொள்ளப்போகிறேன். அதில் ஒருவேளை நான் இறக்க நேரிட்டால் எனது சொத்துக்கள் அனைத்தும் முஹம் மதுவுக்கே சொந்தமாகும். எனது உடமைகளுக்கு முஹம்மதையே வாரிசாக்குகிறேன். இதற்கு நீங்கள் அனைவரும் சாட்சியாக இருங்கள். முஹம்மத் எனது சொத்துகளை இறைவன் காட்டும் வழியில் செலவு செய்வார்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் போர் தளவாட கருவிகளுடன் உஹத் நோக்கி சென்றார். அங்கு முகைரிக் தனது உயிரை இழக்கும் வரை போராடியுள்ளார்.

    இதை அறிந்து கொண்ட அண்ணலார், ‘முகைரிக் யூதர்கள் அனைவரிலும் சிறந்தவர்’ என்று நற்சான்று வழங்கினார்கள்.

    நபிகளார் மதீனாவில் மேற்கொண்ட ஏராளமான தர்ம காரியங்களுக்கு முகைரிக்கிடமிருந்து பெறப்பட்ட வளமான ஈச்சந் தோட்டத்தின் வருவாயே காரணமாக அமைந்தது. மாநபி வழங்கிய நற்சான்றின்படி, உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்த முகைரிக் என்றும் சிறந்தவராகவே உலக வரலாற்றில் கருதப்படுகிறார்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    Next Story
    ×