search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்
    X

    நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்

    ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன்: 33:21)
    நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன்: 33:21)

    அண்ணலாரைக் குறித்து அல்லாஹ் அறிமுகம் செய்கிறபோது, ‘தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது’ என்று மட்டும் அறிமுகம் செய்யவில்லை. ‘அத்தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ என்று கூறி நபிகளாரின் ‘அழகியல் ஆளுமை’யை நமக்கு அறிமுகம் செய்கிறான்.

    அல்லாஹ்வின் அறிமுகத்திற்கேற்ப அண்ணலாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஓர் அழகியல் நேர்த்தியும், ஒழுங்கியல் செம்மையும் பின்னிப்பிணைந்திருப்பதை நாம் காணலாம்.

    நபிகளாரின் சொல், செயல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அவர்கள் பெற வேண்டிய உரிமைகள் என அனைத்து செயல்பாடுகளிலும் நபிகளார் அழகான ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தார்கள்.

    இதனால் தான் நபிகளாரின் நற்குணம் தனியொரு இறை வசனத்தின் மூலம் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படுகிறது:

    ‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4)

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபிகளாரின் குணம் எப்படியிருந்தது?’ என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘நபிகளாரின் குணம் திருக்குர்ஆனாக இருந்தது’ என்று கூறினார்கள் என்பது நபிமொழியாகும்.

    திருக்குர்ஆன் தெளிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானது. அதன்படியே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அழகானது, ஆதாரப்பூர்வமானது. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.

    இதனால்தான் ஒரு இறைபக்தனைப் பற்றி பேசும்போது நபிகளார் இவ்வாறு கூறினார்கள்:

    ‘நற்குணத்தில் பரிபூரணமானவர்தான் ஈமான் எனும் இறைவாசத்தில் பரிபூரணமானவர் ஆவார்’.

    இதை மெய்ப்பிக்கும் திருக்குர்ஆன் வசனம் இது:

    ‘(முமீன்களே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முமீன்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த கிருபையும் உடையவராக இருக்கின்றார்’. (திருக்குர்ஆன் 9:128)

    இன்றைக்கு இந்த பண்புகள் நம்மிடம் இருக்கின்றதா? நம்மை ஒட்டி வாழும் நம் சகோதரர் களுக்கு நாம் நன்மையை நாடுகிறோமா, இல்லை தீமையையா?. அவர்களுக்காக நாம் எதைவிட்டுக் கொடுத்தோம்? இக்கட்டான நேரங்களில் தானே நம் நற்குணம் வெளிப்பபட வேண்டும். அதுதானே நம்முடைய மனிதாபிமானத்திற்கு நல்லழகு.

    ‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ், அநீதியிழைத்தவனை மன்னித்திடு. தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்’ என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல. அவையாவுமே அனுபவப்பூர்வமான, செயலாக்கம் பெற்ற வெற்றிச் செயல்கள்.

    எனவே நமது வாழ்நாட்களில் இம்மூன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் கூட நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    நற்குணத்துடன் நாம் வாழ வேண்டுமே தவிர, நயவஞ்சகத்தனத்துடன் அல்ல. இதுகுறித்து இறைத்தூதர் இப்படிச்சொன்னார்கள்:

    ‘நயவஞ்சகன் (முநாபிக்) என்பவன் பேசினால் பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்; ஒப்பந்தம் செய்தால் முறித்து விடுவான்’ என்று இந்நான்கு நல் அடையாளங்களை நமக்கு விளக்கிக் கூறினார்கள்.

    நபிகள் நாயகம் அவர்கள் தமது தோழர்களுடன் எப்படி நற்குணத்துடன் நடந்துகொண்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் திருக்குர்ஆன் வசனம் இது:

    ‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்(எனும்கிருபை)தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்த முடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர் களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3:159)

    இவ்வசனத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள். அடுக்கடுக்காக பல்வேறு உண்மைகள் உங்களுக்கு புலப் படக்கூடும். இப்படியெல்லாம் நபிகளார் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொண்டதனால் தான் ‘அகிலத்தார்களின் அருட்கொடை’ என நபியவர்கள் அல்லாஹ்வால் அடையாளப்படுத்தப்பட்டார்கள். அதைக்கூறும் இறைவசம் இதோ:

    ‘(நபியே) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக, ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

    எனவே, நபிகளாரின் நற்குணங்களை செயல்படுத்தும் போது, நிச்சயம் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நமக்கு கிடைக்கும். நபிகளாரின் நற்குணங்கள் அனைத்தையும் கடைப்பிடிக்க நாம் முன்வர வேண்டும்.

    வாருங்கள், நற்குணங்களை போற்றுவோம், துர்க்குணங் களை மாற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    Next Story
    ×