search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை, குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள்
    X

    திருமண தடை, குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள்

    திருமணமாகாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் சென்னை வடபழனியில் உள்ள ஆதி மூலப் பெருமாள் கோவில் பெருமாளை வழிபட்டால் அனைத்தும் நிறைவேறும்.
    சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுமார் 600 வருடம் கடந்த பழமையான ஆலயம் இது.

    இவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    நிரந்தர உத்தியோகம் கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, தீராத வியாதியில் இருந்து நிவாரணம் பெற, வியாபார அபிவிருத்தியடைய பெருமாள் சன்னிதியில் பிரார்த்தனை செய்து பலடைகின்றனர். இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தம்பதிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்யம் ஏற்பட தாம்பத்திய சேஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கி பலனடைகின்றனர்.

    திருமணமாகாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக 16 வாரம் வழிபட வேண்டியது அவசியம். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொணர்ந்து, 3 மாலையையும் பெருமாளுக்குச் சாத்தி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். தாயார் சன்னிதியில் சங்கல்பம் செய்து கொண்டு 12 முறை வலம் வந்து 16 வாரம் விரலி மஞ்சள் கணக்கின்றி மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 16-வது வாரம், 3 கல்யாண மாலை தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திருமணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் ஆலயம் வந்து, பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.

    ரோகிணி நட்சத்திரத்தன்று காலை விரதமிருந்து, வீட்டிலிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, இரண்டு செவ்வாழை ஆகியவற்றை ஆலயத்திற்கு கொண்டு வர வேண்டும். தொட்டில் கண்ணனை திருக்கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, கண்ணன் திருவடியில் வைத்து பூஜை செய்து பின் அதை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வந்து, மனமுருகி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்துக் கட்டி விட்டு, சந்தான கோபாலனுக்கு பால் பாயசத்தை சமர்ப்பித்து பக்தர்களுக்கு விநியோகித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திரத்தில் செய்ய வேண்டும்.
    Next Story
    ×