search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகல தோஷங்களும் நீக்கும் கருட வழிபாடு
    X

    சகல தோஷங்களும் நீக்கும் கருட வழிபாடு

    கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும்.
    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடை பெறும்.

    கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள். கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.



    ராமாயண காலத்தில் போர்க் களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

    கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார். கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும்.
    Next Story
    ×