search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணம், புத்திர தோஷம் நீங்கும் சரபசூலினி
    X

    திருமணம், புத்திர தோஷம் நீங்கும் சரபசூலினி

    பிளாஞ்சேரி ஸ்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.
    கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயத்தில், கயிலாசநாதரும், காமாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் அஷ்ட பைரவர்களுடன், சரபசூலினி அம்மனும் வீற்றிருக்கிறார்.

    ஊழி காலத்தில் பிரளயம் ஏற்பட்டு, உலக உயிரினங்கள் அரியும் நிலை உருவானது. இதை உணர்ந்த பிரம்மதேவர், சப்த ரிஷிகளை அழைத்து, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும்படி கூறினார். அவர்களும் பிரம்ம தேவரின் ஆணையை ஏற்று தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஆத்ரேய மகரிஷி என்பவரின் மகனான பிராச மகரிஷி, பிரம்மதேவரிடம் ‘நானும் சப்த ரிஷிகளோடு இணைந்து தவத்தில் ஈடுபடட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு பிரம்மதேவர், ‘உன்னுடைய கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் தவம் இருக்கும் முயற்சியை நீ செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிராச மகரிஷி, இந்தத் தலம் வந்து கயிலாச நாதரையும், காமாட்சி அம்மனையும் வழிபட்டு தவம் மேற்கெண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கயிலாசநாதர் அசரீரியாக தோன்றி, ‘உனது கர்மவினைகள் அகல, நீ சரபசூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 1,008 பவுர்ணமி நாட்களில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தி, சரபசூலினியை வேண்டினால், அவளது அருளால் உன்னுடைய கர்மவினை அகலும். மேலும் உன்னுடைய தவப் பயனால், உலகம் அழிவில் இருந்து காப்பாற்றப்படும்’ என்றார். பிராச மகரிஷியும் அவ்வாறே செய்து பலன் பெற்றார்.

    பிராச மகரிஷி வழிபட்டதால், இந்தத் தலம் பிராசவனஞ்சேரி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.

    இந்த ஆலயத்தில் மட்டுமே பிராச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அருள்புரியும் சரபசூலினி அம்மன் இருக்கிறார். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது.
    Next Story
    ×