search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்
    X

    பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்

    ஒருவர் ஜாதகத்தில் கர்மாவினைகள், எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து நலம் பெறவேண்டும்.
    பொதுவாக ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.

    சரி, இதில் தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு எல்லோருக்கும் பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா? சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இது எதனால்? இப்படி நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.

    பரிகாரம் :

    1. த்ருத கர்மா (தெரிந்தே செய்த பாவம்):

    இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது.



    இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. அதை ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கஷ்டங்கள் தொடர் கதையாக வந்துகொண்டு இருக்கும்.. அனுபவித்துதான் தீரவேண்டும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

    2. த்ருத அத்ருத கர்மா (தெரிந்தே செய்த தவறு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது):

    சில சமயம் நாம் செய்யும் காரியம் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்திருப்போம். நல்லவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் விட்டிருப்போம். தீயவர்களுக்கு அவர்களுடைய குணம் அறியாமல் உதவி செய்திருப்போம். ஆனால், அந்தக் காரியம் தவறாக முடிந்திருக்கும். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது.

    இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    3. அத்ருத கர்மா (தெரியாமல் செய்த தவறு):

    மிகவும் மன்னிக்கக்கூடிய சிறய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.

    ஆகவே மேற்கூறிய கர்மாவினைகள், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நலம் பெறவேண்டும்.
    Next Story
    ×