search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை பாக்கியம் அருளும் பழமுதிர்சோலை முருகன்
    X

    குழந்தை பாக்கியம் அருளும் பழமுதிர்சோலை முருகன்

    தொடர்ச்சியாக 15 வாரம் பழமுதிர்சோலை ஸ்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்வழக்கு இருந்தாலும், முருகப்பெருமானுக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுபடை வீடு என்பது முக்கியமானது. ஆறுபடை வீடுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். இந்த ஆறுபடை வீடுகளில் 6-வது தலமாக விளங்குவது ‘பழமுதிர்சோலை’ திருத்தலம்.

    இயற்கை எழில் சூழ்ந்த சிறப்புமிக்க திருத்தலம் இது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. மற்ற படைவீடுகளில் இல்லாத சிறப்பு அது என்றால் மிகையல்ல. ஆம்.. ஆறுபடை வீடுகளில் இந்த படைவீட்டில் மட்டும் தான் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை என தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறார்.

    தன் வாழ்நாள் முழுவதும் தமிழை வளர்த்தபடி, முருகனையே நினைத்து பாடல்களைப் பாடியவர் அவ்வையார். அவர் ஒருமுறை இந்த தலத்திற்கு வந்தார். நெடுந்தூர பயணம் என்பதால் அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், ‘என்ன பாட்டி நாவல் பழம் தரட்டுமா?’ என்று கேட்டான். களைப்பாகவும், பசியாகவும் இருந்ததால் அவ்வை பாட்டியும், ‘சரி.. கொஞ்சம் பழங்களை உதிர்த்துக் கொடு’ என்றார்.

    உடனே அந்தச் சிறுவன், ‘பாட்டி! சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்றான்.

    ‘இது என்ன வேடிக்கையான கேள்வி.. பழம் சுடுமா?’ என்று நினைத்த அவ்வையார், ‘சரியப்பா.. சுடாத பழமாகவே உதிர்த்துக் கொடு’ என்றார்.

    அந்தச் சிறுவனும் மேலே இருந்து நாவல் பழங்களை உதிர்த்துப் போட்டான். கீழே விழுந்ததில் நாவல் பழங்களின் மீது மண் ஒட்டியிருந்தது. மண்ணை அகற்றுவதற்காக ஊதினார் அவ்வை. அதைப் பார்த்து சிறுவன், ‘என்ன பாட்டி.. பழம் சுடுகிறதா?’ என்று கேட்டான்.

    தன்னுடன் விளையாடுவது இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அவ்வையார், மரத்தின் மேல் இருந்த சிறுவனை நோக்கிப் பார்த்தார். அப்போது அந்தச் சிறுவன் முருகப்பெருமானாக மாறி அவ்வைக்கு காட்சியளித்தார் என்கிறது தல புராணம்.



    இங்கு நடந்தது இறைவனின் திருவிளையாடலே என்பதை உணர்த்தும் வகையில், இந்தத் தலத்தில் இருக்கும் நாவல் மரத்தில் சஷ்டி திருநாளில் மட்டுமே நாவல் பழங்கள் பழுத்துத் தொங்குகிறது. இந்த மரத்தின் கீழ்தான் சஷ்டி திருநாளில் சூரசம்ஹார விழா நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் வேலுக்கு தனிச் சன்னிதி உள்ளது. பழங்காலத்தில் இங்கு வேலை மட்டுமே வழிபடும் முறை இருந்ததாகவும், அதன் பிறகே முருகன் மற்றும் வள்ளி- தெய்வானை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் வேல் 3 அடி உயரத்தில் உள்ளது. அதற்கு பக்தர்கள் பால், பன்னீர், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, தங்களின் வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் உள்ள மலையில் இருந்து சிறிது தூரத்தில் ராக்காயி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் அருகில் ஒரு சுனை உள்ளது. இது ‘சரவணப் பொய்கை’ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சுவை மிகுந்த இந்தத் தண்ணீரை ‘நூபுர கங்கை’ என்றும் அழைக்கிறார்கள். இந்த தண்ணீரில் குளித்தால், தோல் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இந்த சுனை உற்பத்தியாகும் இடம் இதுவரை அறியப்படாத ரகசியம். முன்காலத்தில் சிறிய அருவியாக கிடைத்த தண்ணீர், இந்தப் பகுதிக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக, குழாய் மூலம் வழங்கப்படுகிறது.

    இங்கு தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. திருமணம் தாமதமாகும் ஆண், பெண் இருபாலரும் இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறார்கள். தொடர்ச்சியாக 15 வாரம் இத்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம் மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் திருக்கோவில் உள்ளது. அதன் மீதுள்ள மலையில் 3 கிலோ மீட்டர் சென்றால், வெகு அழகான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது பழமுதிர்சோலை திருத் தலம்.
    Next Story
    ×