search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாபம் நீக்கிய கார்த்திகை மாத சிறப்பு
    X

    சாபம் நீக்கிய கார்த்திகை மாத சிறப்பு

    கார்த்திகை மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவதுடன், எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    கார்த்திகை மாதம் முழுவதும், எல்லா நீர் நிலைகளிலும் கிருஷ்ண பரமாத்மா வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இந்த மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவதுடன், எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வேத சர்மா என்பவர் வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். தர்ம நெறி தவறாது வாழ்ந்த அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வேத சர்மாவின் தர்ம நெறிக்கு நேர்மாறாக இருந்தான். வேலைவெட்டி எதுவும் செய்யாமல், எப்போதும் தான்தோன்றித் தனமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.

    வேதசர்மாவுக்கு தன்னுடைய மகனைப் பற்றிய கவலை அதிகரித்தது. ஒரு நாள் தனது மகனை அழைத்த வேத சர்மா, ‘மகனே! கார்த்திகை மாதம் மிகவும் உன்னதமானது. இந்த மாதத்தில் மகாவிஷ்ணு, அனைத்து நீர்நிலைகளிலும் வாசம் செய்கிறார். சிவபெருமான் ஜோதி ரூபமாக தோன்றிய மாதமும் இதுதான். ஆகையால் கார்த்திகையின் சிறப்பு மிக உயர்ந்தது. எனவே அந்த மாதத்தில் மட்டுமாவது நீ, கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து வழிபட்டு வா. உனக்கு வாழ்வு ஒளிமயமாக மாறும்’ என்றார்.

    ஆனால் வேதசர்மாவின் மகனுக்கோ, தந்தையின் வார்த்தை கோபத்தைக் கொடுத்தது. ‘என்ன.. விளக்கேற்ற வேண்டுமா? விளக்கின் விலை தெரியுமா? எண்ணெய் விலை என்னவென்று தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு விளக்கு என்றால் கூட, 30 நாட்களுக்கு முப்பது விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கோடு, அதற்காக எண்ணெய் செலவையும் சேர்த்தால், நம்முடைய வாழ்வில் ஒளி வீசாது. பணம்தான் கரைந்து போகும்’ என்று விதண்டாவாதம் பேசி விளக்கேற்ற மறுத்து விட்டான்.

    அதைக் கேட்டதும் வேதசர்மாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘எந்த வேலையும் செய்யாமல், தின்று விட்டு சும்மா சுற்றித்திரியும் நீ, எலியாகப் பிறந்து அலைந்து திரிவாயாக..’ என மகன் என்றும் பாராமல் சாபம் கொடுத்துவிட்டார். மறுகணமே, அவன் எலியாக மாறிவிட்டான்.

    துன்பம் வந்தால்தானே அனைவருக்கும் புத்தி வரும். அவனுக்கும் அப்படித்தான். தன் நிலையைக் கண்டு இரக்கம் காட்டுமாறு, தந்தையிடம் வேண்டுகோள் வைத்தான்.

    வேதசர்மா, ‘கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணராமல் திரிந்த நீ, அதே கார்த்திகை மாத மகிமையின் புராணத்தை, ஒருவர் கதையாகச் சொல்ல, நீ கேட்கும்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று அருளி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    அது சரி.. எலிக்கு இது எந்த மாதம் என்று எப்படித் தெரியும்?... சாபம் பெற்ற எலி வளைதோண்டி வைத்து கிடைத்த உணவை தின்று தன்னுடைய வாழ்நாளை கழித்து வந்தது. வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. கார்த்திகை மாதம் ஒரு நாள் கவுசிக முனிவர் தன் சீடர்களுடன் காவிரி நதிக்கரைக்கு வந்தார். சீடர்களுக்கு பலவித விஷயங்களை போதித்து வந்ததுடன் கார்த்திகை மாத மகிமையை பற்றியும் எடுத்துரைத்தார்.

    அவர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட எச்சில் சாப்பாட்டை உண்பதற்காக தன் வளையில் இருந்து வெளியே வந்தது எலி. அது சாபம் பெற்ற, வேத சர்மாவின் மகன்தான். அப்போது கவுசிக முனிவர், கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தன் சீடர்களுக்கு கூறிக்கொண்டிருந்த புராணம், எலியின் காதிலும் விழுந்தது. ஆனால் அதற்குத்தான் அந்த மாதத்தின் பெருமையையோ, தனக்கு சாப விமோசனத்தை கொடுக்கும் கதை இது என்பதையோ அறியாத எலி, உபன்யாசம் முடியும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. உபன்யாசம் முடிந்ததும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்! எலியாக இருந்த வேத சர்மாவின் மகன், தன் சுய உருபெற்று அங்கு நின்றான்.

    அதைக் கண்ட கவுசிக முனிவரின் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களிடம் தன் முன்கதையை விளக்கினான் வேத சர்மாவின் மகன். பின்னர் அவன், கவுசிக முனிவரிடம் சீடனாக சேர்ந்தான்.

    Next Story
    ×