search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
    • சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள்.

    கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.

    இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.

    கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.

    இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சியான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.

    கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சயதார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.

    மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.

    கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பூ போட்டு  உத்தரவு கேட்கும் பக்தர்கள்

    கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.

    • இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
    • மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

    ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.

    காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.

    நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.
    • உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும்.

    ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.

    இந்த மாவிளக்கு வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

    பச்சரிசி கால் கிலோ, பாகு வெல்லம் கால் கிலோ, ஏலக்காய் நாலு, 50 கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.

    மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும். நன்கு அரைத்து மாவாகிவிடும் வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.

    பந்து போல் உருட்டவேண்டும், அவரவர் வீட்டு வழக்கப்படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும் அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.

    குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும். இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.

    திரி நன்கு எரியும். நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.

    பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.

    ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும். வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும். உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும். திருமண தடை, வேலைவாய்ப்பின்மை, தொழில் – வியாபார முடக்கம் போன்ற நிலைகள் அகலும். வாழ்க்கை மேம்பட எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். துஷ்ட சக்திகள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் நிச்சயம் நல்ல பலனைத்தரக்கூடியவை.
    • பிரச்சனைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    * சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

    * கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி , திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

    * ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    * சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    * கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    * மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    * செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

    * ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

    * பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க , தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

    * புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

    * பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    * வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

    * எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

    * வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்

    • பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது.
    • தீவினைகள் அடியோடு விலகும்

    வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்து குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

    பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது. அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியன்று காலை நேரத்தில் மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. எரியும் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்களை அர்ப்பணிக்கிறார்கள்.

    எந்த விதமான நெடி, கமறல், காரம் போன்றவை இருக்காது என்பது அதிசயமான விஷயம். இந்த யாகத்தை நாம் நடத்தினாலும், மற்றவர்கள் நடத்தும்போது கலந்து கொண்டாலும் மரண பயம் நீங்கும். நோய்கள், துன்பங்கள், மன வேதனைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள், செய்வினைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்வு சிறக்கும்.

    இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    • எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு.
    • எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

    எல்லா பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வு உண்டு. நம் பிரச்சனைகள், சங்கடங்கள் தீர தெய்வ வழிபாடு நன்மை தரும். ஒவ்வொரு கஷ்டங்களும் தீர ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், கஷ்டங்கள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

    எமது முன்னோர்கள் ஒரு அழகான தொகுப்பினை பட்டியலிட்டு தந்துள்ளனர்.

    விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்

    செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

    நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

    வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமணியர், செவ்வாய் பகவான்

    ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்

    மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

    கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி

    திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

    மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி

    புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

    தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி

    புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி

    விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி

    உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி

    வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்

    சனி தோஷம் நீங்க – ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

    பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்

    பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

    அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி

    • உங்களுக்கு இந்த பரிகார குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
    • இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்.

    பெரியவர்கள் நமக்காக நல்லதாக ஒரு சில விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நல்லது என்று நமக்காக சொல்லப்பட்ட பரிகாரங்களை ஆராய்ச்சி செய்யாமல், அனுபவப்பூர்வமாக பின்பற்றி, அதன் மூலம் வரக்கூடிய பலனை பெறுவதே புத்திசாலித்தனம். இப்படி செய்தால் நல்லது நடந்து விடுமா? இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகி விடுவோமா? என்ற எண்ணத்தோடு பரிகாரத்தை செய்யாதீர்கள். இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் நமக்கு நன்மை நடக்கும் என்ற நோக்கத்தோடு எவரொருவர் பரிகாரத்தை செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் நன்மை மட்டும்தான் நடக்கும்.

    அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாகன விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வாகனங்களில் பயணிக்கும்போது ஒரு சிறிய காகிதப்பூ உங்களோடு எடுத்து சென்றால் விபத்துகள் ஏற்படாது.

    தங்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், நிறைய பணம் உள்ளது போன்ற படத்தை காலையில் எழுந்ததும் முதலில் நாம் பார்த்தால் நமக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    நம்முடைய வீட்டைச் சுற்றி நீரோட்டம் இருப்பது போல இயற்கையாகவே இருந்தால் அது நமக்கு பழக்கத்தை அதிகமாக தரும். இயற்கையான நீரோட்டம் இல்லை என்றால் செயற்கையான நீரோட்டத்தை நாமே உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்.

    தூங்கும் போது எப்போதுமே இடது கை கீழே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆயுள் நீடிக்கும்.

    உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தை இரவு தூங்காமல் அழுது கொண்டே இருக்கிறதா. நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென எழுந்து பயந்து அழுகிறதா. தூங்குகின்ற குழந்தைக்கு பக்கத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பை கரைத்து வையுங்கள். குழந்தை நிம்மதியாக தூங்கும்.

    தினமும் தூபம் போடும்போது சந்தனப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொண்டால் வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்கும்

    குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினம்தோறும் அகில் பட்டை பொடியை சேர்த்து தூபம் போட வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

    வீட்டில் தடைப்பட்டிருக்கும் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றால், தூபத்தில் துளசி விதைகளை போட வேண்டும். தூதுவளை பொடியைத் தூபத்தில் போட்டு அந்தப் புகையை வீடு முழுவதும் காண்பிக்க உங்களுடைய குல தெய்வம், உங்கள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை. தூதுவளைக்கு இறைவனுக்கே தூது செல்லக் கூடிய சக்தி உண்டாம்.

    • பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம்.
    • வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள்.

    பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள்.

    அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.

    தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.

    விரத முறைகள்

    ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் பெருமாளின் நாமம் ஒன்றினை உச்சரித்துக் கொண்டேயிருக்கலாம். '

    ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா' என்று 108 முறை சொல்லித் துதிக்க மன வலிமையும் ஆரோக்கியமும் மேம்படும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

    • புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.
    • சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை.

    சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் பிரதோஷ சமயத்தின் போது நெல்லையப்பர் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும்.

    எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தலமாகவே இது அமைந்திருக்கிறது.

    சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.

    • அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.
    • எந்த நேரத்தில் திருஷ்டி கழிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

    திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. ஏதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.

    சில சமயம் அதில் ஏதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

    கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.

    தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும்.

    கவனிக்க :

    திருஷ்டிக் கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.

    தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.

    கண் திருஷ்டி பரிகாரங்கள்

    மலர்கள் :

    வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண்படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.

    வாழை :

    ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய், அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.

    இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.

    ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

    மீன்தொட்டி :

    இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

    உப்பு :

    குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சம்பல், அலர்ஜி ஏதாவது ஏற்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.

    எலுமிச்சை :

    நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.

    வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொடங்க விடலாம். செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.

    படிகாரம் :

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம்.

    கடைகளில் படிகாரக் கல் என்றே கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும்.

    தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள்.

    படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

    ஆகாயகருடன் கிழங்கு :

    கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது "ஆகாய கருடன் கிழங்கு". இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

    இதை வாங்கி கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல் தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண்திருஷ்டி நீங்கி விடும்.

    இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது.

    தண்ணீர் :

    நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து தொடர்ந்து ஆச்சரியப்பார்வையை வீசினால் அல்லது பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்.

    இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

    எண்ணெய் :

    உடல் மெலிந்து, சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டே இருந்தால் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லவேண்டும். பின்னர் அதனை யாருக்காவது தானமாக கொடுத்துவிட வேண்டும்.

    கால்கட்டைவிரல் :

    பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    கடுகு :

    குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும்.

    குழந்தை :

    கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து, தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.

    • நீங்கள் செய்யும் சில செயல்கள் வீட்டில் செல்வம் குறைய காரணமாக இருக்கிறது.
    • நீங்கள் செய்யும் எந்த செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

    1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது..

    2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல், ஆண்கள் விளக்கேற்றுவது...

    3. தலைமுடி தரையில் உலாவருவது..

    4. ஒற்றடைகள் சேருவது..

    5. சூரிய மறைவுக்கு பின் வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, தூங்குவது...

    6. எச்சில் பொருள்கள், பாத்திரங்கள், காபி கோப்பைகள் ஆங்காங்கே இருப்பது...

    7. தினமும் தலைக்கு குளிப்பவர்களைத் தவிர, மற்ற பெண்கள் செவ்வாய் வெள்ளி நீங்கலாக.. இதர நாளில் தலை குளிப்பது...

    8. ஆண்கள் புதன் சனி தவிர, மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது..

    9. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது...

    10. சுவற்றில் ஈரம் தங்குவது...

    11. செல் (கரையான்) சேருவது...

    12. பூரான் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது..

    13. அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது...

    14. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது... வீணடிப்பது...

    15. உணவுப் பொருட்களை வீணடிப்பது.. சாக்கடையில் கொட்டுவது...

    16. உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றைச் சுத்தமாகத் தீரும் வரை வாங்காமல் இருப்பது...

    17. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல், மின்சாரம் சேமிப்பதாகச் சொல்லிக் கொண்டு, வெளிச்சமில்லாமல் இருட்டில் இருப்பது..

    18. மெல்லிசை கேட்காமல், சதா காலம் ராஜஸ இசையை, அதிக சப்தமுள்ள இசைகளை கேட்பது..

    19. இல்லை, இல்லை.. வராது, வராது... வேண்டாம், வேண்டாம்... போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது..

    20. படுக்கையையும், பூஜைப் பொருட்களையும் வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது..

    21. வாசலில் செருப்பு, துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்திருப்பது...

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
    • சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.

    பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.

    வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.

    எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

    கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.

    எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.

    இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.

    ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.

    ×