search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு
    X

    ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு

    ரஜினியின் புதிய கட்சி குறித்த தகவல் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அந்த முக்கிய அறிவிப்பை சென்னையில் பிரமாண்ட மாநாடு நடத்தி அறிவிக்கின்றனர்.
    நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார்.

    ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். இதை யடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டது.

    ரஜினி பலமுறை அரசியல் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஒருமுறை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். என்றாலும் தனிக்கட்சி தொடங்குவதில் எந்தவித அக்கறையும் காட்ட வில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு நல் ஆட்சி தேவை. எனவே புதிய கட்சி தொடங்க ரஜினி முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.



    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடிவு செய்து விட் டார்’ என்று தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக திருச்சியில் ரஜினி ரசிகர்கள் பங்கேற்ற மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு நடத்தினார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். “அரசியலுக்கு வருவதற்கு இது தான் சரியான தருணம் என்று என்னிடம் ரஜினி தெரிவித்துவிட்டார்” என்று இந்த மாநாட்டில் தமிழருவி மணியன் கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

    இந்த நிலையில், ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் மூலம் தயாரித்து இருப்பதாகவும், அதில் பொருத்தமான பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ரஜினி தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    கட்சியின் கொள்கைகளாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, நதிகள் இணைப்பு போன்றவை இடம்பெற உள்ளன. தமிழ் நாட்டில் நீர்நிலைகளை அதிகரிப்பது, தமிழக நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய கொள்கைகள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.



    ரஜினி பல்வேறு மாவட்ட ரசிகர்களை ஏற்கனவே சந்தித்தார். மீதம் உள்ள மாவட்ட ரசிகர்களை செப்டம்பர் இறுதிக்குள் சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் அடுத்த மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

    அப்போது புதிய கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ஏற்கனவே ‘2.0’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த மாதத்துக்குள் ‘காலா’ படப்பிடிப்பும் முடிந்துவிடும். எனவே, ரசிகர்கள் சந்திப்பின்போது கட்சி அறிவிப்பு வெளியாவது உறுதி என்று ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதையடுத்து, சென்னையில் ரஜினி ரசிகர்கள் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் ரஜினியின் ‘2.0’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.

    இந்த மாநாட்டில் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதில் கொடி, சின்னம், கொள்கைகள் ஆகியவையும் இடம் பெறும். இந்த மாநாட்டில் கட்சியின் தீவிர செயல்பாடுகள் பற்றியும் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு கட்சியின் செயல்பாடுகள் தீவிரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
    Next Story
    ×