search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரியா படத்தில் இளையராஜா இசை அமைப்பு
    X

    "பிரியா'' படத்தில் இளையராஜா இசை அமைப்பு

    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.

    திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.

    இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.

    தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.

    அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.

    தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.

    மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.

    பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

    இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.

    அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.

    "பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.

    முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.

    பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.

    காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

    லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடைïறு இல்லாதிருந்தது.

    இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.

    சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.

    பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.

    நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.

    தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.

    இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.

    அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.

    சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.

    இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.

    இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்ïமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.

    ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.

    "பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.

    இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.

    ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மிïசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மிïசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.

    ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது

    அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.

    நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.

    "ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.

    Next Story
    ×