search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த இளையராஜா
    X

    சுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த இளையராஜா

    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.

    சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார். அவர் கூறினார்:-

    "ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து கொள்வார்.

    மதுரைக் கச்சேரி என்றால் கம்யூனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.

    மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

    அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.

    முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.

    "மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.

    இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.

    எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம். "ஆமாம்'' என்பார்கள். உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.

    உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள். நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.

    இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும். "சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம். "அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.

    "அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!

    வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளியூர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள். "ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும். சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள். அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.

    இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.

    "பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல். கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன். பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.

    "ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன். பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம். "அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.

    பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார். "வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம். ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.

    உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார். அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார். அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.

    ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.

    ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான். பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார். பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும். கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.
    Next Story
    ×