search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு
    X

    முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.

    1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-

    `அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.

    "நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.

    ``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.

    "யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

    "அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.

    நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

    பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.

    அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.

    "நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.

    "உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.

    "அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.

    தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.

    மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.

    "ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.

    ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    "ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.

    நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

    10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.

    அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.

    "நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.

    படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.

    சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.

    ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.

    ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.

    `வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.

    "மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

    பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.

    "யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.

    "புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.

    "ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.

    `என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

    பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.

    பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.

    விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.

    பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.

    அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.

    ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.

    காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×