search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - சாரதா: பிரமாதமாக நடித்தார், விஜயகுமாரி
    X

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - "சாரதா'': பிரமாதமாக நடித்தார், விஜயகுமாரி

    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், குடும்பப்பாங்கான கதைகளுக்கு அருமையாக வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த காலக்கட்டம் அது. திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்ட பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்), கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "சாரதா'' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார்.

    இது புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது.

    விபத்தில் ஆண்மை இழந்து விடும் கதாநாயகன், மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வான். இதை விரும்பாத கதாநாயகி, பெரிய மனப்போராட்டத்தில் இருப்பாள். இறுதியில், கணவன் காலில் விழுந்து ஆசி பெறும்போது, உயிர் போய்விடும்.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், விஜயகுமாரி கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் எம்.ஆர்.ராதா, நாகையா, எம்.வி.ராஜம்மா, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

    படத்தின் கதை - வசனத்தை உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார், கோபாலகிருஷ்ணன்.

    கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...'', "மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு'', "தட்டுத்தடுமாறி நெஞ்சம்'' என்பது உள்பட எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன.

    "சாரதா'', 16-3-1962-ல் வெளிவந்தது. கதை, வசனம், நடிப்பு, பாடல் என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

    குறிப்பாக, விஜயகுமாரியின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.

    சாரதா பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "சாரதா'' ஸ்டூடியோ உதயம்

    "ஏ.எல்.எஸ். அவர்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மெஜஸ்டிக்'' என்ற ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து, அதற்கு "சாரதா ஸ்டூடியோ'' என்று பெயர் சூட்டினார்.

    சாரதா படத்திற்கு பிறகு ஏ.எல்.எஸ். எடுத்த படங்களுக்கெல்லாம் படத்தின் கதாநாயகிகளின் பெயரையே சாந்தி, ஆனந்தி, வசந்தி என்று வைத்தார். இந்தப் படங்களில் எல்லாம் நான்தான் கதாநாயகியாக நடித்தேன்.

    "சாரதா'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, சரவணா பிலிம்ஸ் தயாரித்த "பாதகாணிக்கை'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்தப் படத்தின் டைரக்டர் கே.சங்கர். ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, அசோகன், எஸ்.வி.சுப்பையா, எம்.வி.ராஜம்மா, ஆகியோருடன் கமலஹாசனும் சின்னப்பையனாக நடித்தார்.

    இந்தப் படத்தில் என்னுடைய மேக்கப் சரியில்லை என்று கூறி, ஹரிபாபு என்ற பெரிய மேக்கப்மேனை எனக்கு மேக்கப் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஹரிபாபு, வெளியே எங்கேயும் போகமாட்டார். நடிகர் - நடிகைகள் அவர் வீட்டிற்குப்போய்தான் மேக்கப் போட்டுக் கொள்ள

    இதனால் நான் மேக்கப் போட்டுக் கொள்வதற்காக, அதிகாலை 4-30 மணியிலிருந்து 5 மணிக்குள் புறப்பட்டுப் போவேன். ஏறத்தாழ அதே நேரத்தில், என்.டி.ராமராவும் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக்கொள்ள வருவார். அப்போது என்னைப் பார்த்த என்.டி.ஆர், என்னை தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். அதற்கு நான், "எனக்கு தெலுங்கு தெரியாதே'' என்று சொன்னேன்.

    "நான் உனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்து சின்ன சின்ன ஷாட்டாக எடுக்கிறேன். அதன் பிறகு உனக்கு தெலுங்கில் நடிப்பது சுலபமாகப் போய்விடும்'' என்றார்.

    அப்போது நான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், என்.டி.ஆர். அவ்வளவு ஆர்வமாக கேட்டும், என்னால் நடிக்க முடியாமல் போயிற்று.

    அன்று அவர் கூறியபடி தெலுங்குப் படத்தில் நடித்திருந்தால், தெலுங்குப்பட உலகிலும் எனக்கொரு கதாநாயகி அந்தஸ்து கிடைத்து இருக்கும்.

    அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா

    அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கதை நன்றாக இருந்தும், பாட்டுக்கள் எல்லாம் அருமையாக அமைந்திருந்தும் படம் ஓடவில்லை.

    அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

    இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.

    அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.

    உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ப.நீலகண்டன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். நிறுவனம் எடுத்த படம் "ஆனந்தி.'' இதில் நானும் எஸ்.எஸ்.ஆரும் கதாநாயகன், கதாநாயகி. எம்.என்.நம்பியாரும் இதில் நடித்திருந்தார். இந்தப்படம் சுமாராக ஓடினாலும், இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்; நெஞ்சிலே நினைவிருந்தால் நீரிலும் தெய்வம் வரும்'' என்ற அந்தப்பாடலை, அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன்.

    தொடர்ந்து "பணம் பந்தியிலே'', "உல்லாசப்பயணம்'', "தேடி வந்த திருமகள்'', "அவன் பித்தனா'', "வழிகாட்டி'', "அல்லி'' முதலிய படங்கள் வந்தன. இவை நானும் எஸ்.எஸ்.ஆரும் இணைந்து நடித்த எங்களுடைய சொந்தப் படங்கள்.

    பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.

    இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.

    அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார். அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன்.

    பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    Next Story
    ×