சென்னை, மார்ச் 7-
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) சார்பில் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு கருத்தரங்கு நடக்கிறது.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கருத்தரங்கில் 'இலங்கை தமிழர் களின் இன்னல்கள்' என்ற தலைப்பில் “டெசோ” அமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.
கருத்தரங்கில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் குறித்து “சேனல்-4” தொலைக் காட்சி குழு தயாரித்த 'நோபயர் ஜோன்' ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
அதைத் தொடர்ந்து டெசோ அமைப்பின் வரைவுத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் பங்கேற்கிறார் என்ற முடிவு நேற்றிரவு வரை எடுக்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.
அதையடுத்து டெசோ கூட்டத்தில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்தை அனுப்பலாம் என்றும் தமிழ் உணர்வு தொடர்புடைய கருத்தரங்கம் என்பதால் மூத்த உறுப்பினர் ஒருவரை அவருடன் அனுப்பலாம் என்று தெரிய வருகிறது.
பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜூம், மேல்சபை எம்.பி.யான வெங்கையா நாயுடுவும் டெசோ கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இடது சாரி கட்சிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தி.மு.க.வின் தேசிய அளவில் தோழமை பாராட்டும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல் லா, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் டெசோ கருத்தரங்கில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.