சென்னை, செப். 15-
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற மிளகாய் பொடி வெங்கடேசன். அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 2011-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்தார்.
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இவரது பெயர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் உள்ளது. ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் வெங்கடேசன் மனு செய்தார். ஆனால் பெயர் நீக்கப்படவில்லை.
இதனால் ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க கோரி வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்தார்.
வெங்கடேசன் சார்பில் வக்கீல் மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும் போது, தங்களது விருப்பு வெறுப்புபடி ஒருவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க கூடாது. மனுதாரர் தனது பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து பலமுறை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை என்றார்.
அவரின் கருத்துக்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ரவுடி பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் இருக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றி போலீஸ் கமிஷனர் முடிவு எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலை ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் மனுதாரர் பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து போலீஸ் கமிஷனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.