திருவாரூர், ஆக. 31-
திருவாரூர் அருகே உள்ள பெருந்தரக்குடியை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 58) இவரது மகன் ராஜா என்கிற முகில்வண்ணன் (27). இவர்கள் இருவரும் சாராயம் விற்று வந்தனர். ராஜா மீது 2 கொலை வழக்கு, போலீசாரை தாக்கியது, பாலியல் பலாத்காரம், கண்டக்டரை தாக்கியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வைத்திலிங்கத்தை எந்த காரணமும் இல்லாமல் ராஜா கொலை செய்தார். விசாரணைக்கு வந்த கொரடாச்சேரி போலீசாரையும் அரிவாளை காட்டி மிரட்டி விரட்டியடித்தார்.
வைத்திலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
ராஜா ஜாமீனில் வெளியே வந்ததும் அவரை கொலை செய்ய வைத்திலிங்கத்தின் மகன்கள் வீரையன், மதியழகன் ஆகியோர் திட்டமிட்டனர். இதற்காக ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை வீரையன், மதியழகன் மற்றும் அதே ஊரைச்சேர்ந்த 7பேர் ராஜாவை சரமாரி அரிவாளால் வெட்டினர்.
சத்தம் கேட்டு அவரது தாய் வீரம்மாள் ஓடி வந்தார். அவரையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பின்னர் ராஜாவின் உடலை வீட்டுக்குள் தூக்கிபோட்டு வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் ராஜா உடல் கரிக்கட்டையானது. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
முதலில் ராஜா வீடு தீபிடித்து எரிந்துதான் இருவரும் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அதன் பின்னர்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த 2 கொலை தொடர்பாக வீரம்மாளின் மூத்தமகன் செந்தில்வேலன் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் தனது தாய், தம்பி ஆகியோரை திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள் என கூறி இருந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொரடாச்சேரி போலீசார் அங்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜும் வந்தார்.
கொலை செய்யப்பட்ட இருவரது பிணத்தையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளான வைத்திலிங்கத்தின் மகன்கள் வீரையன், மதியழகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், முனியன், சுந்தரமூர்த்தி, முத்தையா, ஜெயராமன் ஆகியோரை கைது செய்தனர்.
கொலையில் சம்பந்தப்பட்ட செல்லதுரை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.