புதுடெல்லி, ஆக. 20-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 35). ராணுவத்தில் சிப்பாயாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளில் 5 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது முகாம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு இறங்க மறுத்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து, தனது புகாரை கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். போலீசார், ராணுவ அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து வருகின்றனர். இருப்பினும் தனது குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், கடந்த 4 நாட்களாக செல்போன் கோபுரத்திலேயே சாப்பிடாமல் போராட்டம் நடத்தி வருகிறார்.
வெள்ளிக்கிழமை செல்போன் டவரில் ஏறியபோது அவர் தனது பிரச்சினைகளை பேப்பர்களில் எழுதி கீழே போட்டார். அதில் ஒரு பேப்பரில், அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், அதனால் தன்னை இந்த இடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவரது புகாரில் உண்மையில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.