சீர்காழி, ஆக. 17-
நாகை மாவட்டம் சீர்காழி தேர் மேற்கு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்லால். இவர் பெரம்பலூரில் அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற குன்னத்தை சேர்ந்த அன்பழகன் (60) வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் உள்ள வங்கியில் ரூ. 1.38 லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகையை எடுத்து கொண்டு மொபட்டில் அடகு கடைக்கு சென்று கொண்டிருந்தார். விளந்திட சமுத்திரம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அன்பழகன் வந்த மொபட் மீது தங்களது மோட்டார் சைக்கிளை மோத விட்டனர்.
இதில் நிலை குலைந்த அன்பழகன் தவறி கீழே விழுந்தார்.அப்போது அவர் வைத்திருந்த நகை பையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அன்பழகன் சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்- இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பழகனிடம் பறிக்கப்பட் பை சீர்காழி அருகே உள்ள சூறைக் காட்டுப்பகுதியில் கிடந்தது.
ஆனால் அதில் பணம் மற்றும் நகை இல்லை. கொள்ளையர்கள் பணம், நகையை எடுத்து கொண்டு வெறும் பையை மட்டும் வீசி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.