திருச்சி, ஆக. 2-
கோவை போத்தனூரை சேர்ந்தவர் அலுமினிய வியாபாரி செல்வம் (52). மதுரைக்கு வியாபார விஷயமாக சென்றபோது அங்கு ஏற்கனவே பழக்கமான நண்பர்களுடன் சூதாட்டம் ஆடினார். இதில் ரூ. 1 லட்சத்தை செல்வம் தோற்றார்.
ஆனால் தோற்ற பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.
எனவே அவருடன் சூதாட்டம் ஆடியவர்கள் செல்வத்தை அடைத்து வைத்து விட்டு அவரது குடும்பத்தினரிடம் ரூ. 1 லட்சம் பணத்தை திருச்சிக்கு கொண்டுவந்து கொடுத்து விட்டு செல்வத்தை மீட்டு செல்லும்படி கூறினர்.
இதுகுறித்து செல்வம் மனைவி சரஸ்வதி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் சரஸ்வதியிடம் ரூ. 1 லட்சம் பணத்தை வாங்குவதற்காக காரில் வந்த கடத்தல் கும்பலை கோட்டை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. அறுமுகம், 2. ராஜேந்திரன், 3. பொன் ராஜ், 4.முருகேசன், 5. விநாயகம்.
இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விநாயகம் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சூதாட்டம், கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.