கொல்கத்தா, ஆக 2-
கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் சர்வதேச இதய நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த உமேஷ் பிரசாத், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் இருவருமே கிட்னி தொடர்பான நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்தவர்கள். இருவருக்குமே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லை எனில் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து, உமேஷ் பிரசாத்துக்கு அவரது மனைவி ரீனா குப்தாவும், முகேஷ் குமாருக்கு அவரது மனைவி நந்தாராணியும் கிட்னி தானம் செய்ய முன் வந்தார்.
இதையடுத்து, இரண்டு பெண்களுக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், ரீமா குப்தாவின் ரத்த குரூப்பும் அவரது கணவரின் ரத்த குரூப்பும் பொருந்தவில்லை.
அதேபோல நந்தாராணி மற்றும் அவரது கணவர் முகேஷ்குமாரின் ரத்த குரூப் பொருந்தவில்லை.
எனவே இரு பெண்களாலும் தங்களது கிட்னியை கணவருக்கு தானம் தரமுடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். அதைக் கேட்டு இரண்டு பெண்களின் இதயமும் நொறுங்கிப் போனது.
அந்த சமயத்தில், மற்றொரு தகவலும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ரீமா குப்தாவின் ரத்த மாதிரி, நந்தாராணியின் கணவர் முகேஷ் குமாரின் ரத்த மாதிரியுடனும், நந்தா ராணியின் ரத்த மாதிரி ரீமா குப்தாவின் கணவர் உமேஷ் பிரசாத் ரத்த மாதிரியுடனும் ஒத்துப்போவதாக இவர்களின் ரத்தத்தை பரிசோதித்த நிபுணர் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் கிட்னி தானம் செய்ய முடியும் எனவும் கூறினார்.
இதையடுத்து இரு பெண்களும் கலந்து பேசினர். இதில் ரீமா முகேஷ் குமாருக்கும், நந்தாராணி உமேஷ் பிரசாத்துக்கும் கிட்னி தானம் செய்வது என்று முடிவானது.
தங்களின் விருப்பத்தை இருவரும் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
டாக்டர்கள் இருவரிடம் இருந்தும் தலா ஒரு கிட்னியை எடுத்து, உமேஷ் பிரசாத்தும், முகேஷ் குமாருக்கும் பொருத்தினர்.
இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து, தானம் செய்த கிட்னிகள் செயல்பட தொடங்கின. இதன் மூலம், ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் உயிர் பிழைத்தனர்.
இரண்டு மாநிலங்களை சேர்ந்த முகம் தெரியாத இரண்டு பெண்கள், ஒரு விபத்து போன்ற சந்திப்பின் மூலம், பரஸ்பரம் தங்கள் கணவர்களின் உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.