ஹம்பன்தோடா, ஜூலை 20-
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் இத்தொடரை 5-0 என்ற நிலையில் வெல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்தோடாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இதையொட்டி கேப்டன் டோனி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது புதிய மைதானம். பிற்பகலில் பலத்த காற்று வீசக்கூடும். இது பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும். அவர்கள் மட்டுமின்றி பேட்ஸ்மேன்களும், பீல்டர்களும் அந்த நிலைமைக்கு ஏற்ப ஆட விரைவாக பழகிக்கொள்ள வேண்டும்.
மேலும், இது மிகப்பெரிய ஆடுகளம் என்பதால், பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்கள், மூன்று ரன்கள் எடுக்காத வண்ணம் பீல்டர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இன்று ஒளி வெள்ளத்தில் பயிற்சி செய்ய உள்ளதால், 2-வது இன்னிங்சில் ஆட்டத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
அணியின் அனைத்து வீரர்களும் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் உள்ளனர். இந்த அதிகரித்த ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி, எங்களுக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும்.
ஓய்வுக்குப் பின்னர் நாங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக இருக்கிறோம். இந்த இடைவெளியில் எங்களின் உடற்தகுதியை பெற நேரம் கிடைத்தது.
இவ்வாறு டோனி கூறினார்.