கும்பகோணம், ஜூலை 20-
பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்தால் கொடுக்கப்படும் தண்டனைகள் விநோதமாகவும், அதேசமயம் விசித்திரமாகவும் இருக்கலாம். அதுவே எல்லை மீறி, மற்ற மாணவர்கள் மத்தியில் கூனிக்குறுகி அவமானப்படும் வகையில் இருக்கக்கூடாது என்று கல்வியாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருந்தாலும் ஒருசில நேரங்களில் ஆசிரியர்கள் கோபத்தில் தங்கள் எல்லையை தாண்டிவிடுகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதன் 5ம் வகுப்பு மாணவியை சிறுநீர் குடிக்க வைத்து தண்டனை கொடுத்தார் விடுதி வார்டன். படுக்கையில் சிறுநீர் கழித்ததால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறிய, அந்த விடுதி வார்டன் கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழகத்தில் அதுபோன்ற கொடுமை நடந்துள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர்கள் சிறுநீர் குடிக்க வைத்து தண்டனை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக அந்த மாணவர் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர்கள் ராஜா, சக்திவேல், கருப்பையா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.