புதுடெல்லி, ஜூலை 16-
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 2009-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. ஆனால் பல வீரர்கள் அங்கு செல்ல தயங்கினர். இதையடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் அவ்வப்போது பேச்சு நடத்தி வந்தனர்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவரும் இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா வரும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளன. ஒருநாள் போட்டிகள் கொல்கத்தா, சென்னை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. இருபது ஓவர் போட்டிகள் பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
டிசம்பர் 3-வது வாரம் தொடங்க உள்ள இத்தொடரில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.