புதுடெல்லி,ஏப்.28-
அரசால் விதிக்கப்படும் வரியால் எண்ணை நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் வில்லையை உயர்த்த வேண்டிய நிலைக்கு எண்ணை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த இழப்பீட்டை சமாளிப்பதற்கு அரசு மானியம் வழங்கினால் மட்டுமே இச்சூழலை சமாளிக்க முடியும் என தெரிவித்தது. இல்லையெனில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8.04 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பெட்ரோல் மீதான வரியை குறைக்க வலியுறுத்திய, பெட்ரோலிய அமைச்சகத்தின் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.பெட்ரோல் மீது சுமத்தப்பட்ட வரியை ரூ.6 குறைக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இக்கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.8 வரை உயருவதை தவிர்க்க முடியாது என்று இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் புடோலா கூறியுள்ளார்.