Recommendations
Recent Activity
கல்லூரி இயக்குனர் பாலியல் தொந்தரவு: நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்- 4 பேர் மயக்கம்
கும்பகோணம், பிப். 23-
கும்பகோணம் முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் திரு இருதய ஆண்டவர் நர்சிங் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 120 மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். குடந்தை மறை மாவட்ட பிஷப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த நர்சிங் கல்லூரி இயக்குனராக மரியம் பிரான்சிஸ் இருந்து வருகிறார்.  
 
இந்நிலையில் விடுதி மாணவிகளுக்கு தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக இயக்குனர் மரியம் பிரான்சிஸ் மீது மாணவிகள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே இயக்குனர், மற்றும் விடுதி வார்டன் டயானா மேரி ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கடந்த 20-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
தொடர்ந்து மாணவிகளின் போராட்டம் வலுபெற்று வந்த நிலையில் நேற்று விடுதி மாணவிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மாணவிகள் சரண்யா, அசியா, வினோதா, பிரியா ஆகிய 4 பேரும் சோர்வடைந்து மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மயங்கி விழுந்த 4 மாணவிகளையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விடுதியில் மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.
 
இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் சிவபாஸ்கர்(கும்பகோணம்), இளங்கோவன் (திருவிடைமருதூர்) மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விரைந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
 
இதற்கிடையே பாலியல் புகார் கூறப்பட்ட இயக்குனர் மரியம் பிரான்சிஸ், விடுதி வார்டன் டயானாமேரி ஆகியோரை குடந்தை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.