Recommendations
Recent Activity
பெனாசிர் கொலை: முஷரப்பை கைது செய்ய இண்டர் போல் உதவியை நாடுவோம்- பாகிஸ்தான் மந்திரி தகவல்
இஸ்லாமாபாத், பிப். 22-
 
கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ இஸ்லாமாபாத் அருகே படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரை துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் தீவிரவாதிகள் கொன்றனர்.
 
அப்போது அதிபராக இருந்த முஷரப் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வில்லை என குற்றம் சாட்டப்பட்டது. எனவே பெனாசிர் கொலை வழக்கில் முஷரப்பும் குற்றவாளி ஆக சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார்.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கோர்ட்டில் நடைபெறும் பெனாசிர் கொலை வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் லண்டனில் தங்கியிருப்பதால் அவர் மீது பாகிஸ்தான் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
 
ஆகவே முஷரப்பை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி இண்டர் போல் போலீசை (சர்வதேச போலீஸ்) நாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே தன் மீது கூறப்பட்டுள்ள புகாரை முஷரப் திரும்ப திரும்ப மறுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் அரசியல் புகுந்துள்ளது என ஒரு டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.